உள்ளூர் செய்திகள்
மாங்காய்

சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 20 டன் மாங்காய் உதிர்ந்து நாசம்

Published On 2022-05-04 10:21 IST   |   Update On 2022-05-04 10:21:00 IST
ஆலங்கட்டி, சூறைக்காற்றுடன் பெய்த மழைக்கு டன் கணக்கில் மாங்காய்கள் உதிர்ந்தன.

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெப்ப சலனம் காரணமாக மழை பெய்து வருகிறது.

சூறைக்காற்று மற்றும் ஆலங்கட்டியுடன் கூடிய மழையால், அறுவடைக்கு தயாராக மாங்காய்கள் உதிர்ந்துள்ளன. குறிப்பாக, கிருஷ்ணகிரி அருகே மோரனஅள்ளி, கொடுகூர், சோக்காடி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 20 டன்னுக்கு அதிகமான மாங்காய்கள் உதிர்ந்தது.

தோட்டத்தில் உதிர்ந்த மாங்காய்கள் கூலி ஆட்கள் மூலம் சேகரித்து, மண்டிகளுக்கு சென்று விவசாயிகள் விற்பனை செய்கின்றனர். உதிர்ந்த மாங்காய்கள் கிலோ ரூ.5க்கு கொள்முதல் செய்யப்படுவதால், போக்குவரத்து கூலி கூட கிடைப்பதில்லை என விவசாயிகள் தெரிவித்தனர்.

இது குறித்து கொடுகூர் பகுதி மா விவசாயிகள் கூறும்போது, மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மா விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எங்கள் பகுதியில் ஆறு மற்றும் கிணறு பாசனம் மூலம் மா விளைச்சல் ஒரளவிற்கு இருந்தது.

இந்நிலையில், ஆலங்கட்டி, சூறைக்காற்றுடன் பெய்த மழைக்கு டன் கணக்கில் மாங்காய்கள் உதிர்ந்தன.

நாங்கள் அறுவடை செய்து மண்டிகளுக்கு கொண்டு செல்லப்படும் பெங்களூரா ரக மாங்காய்கள் டன் ரூ.14 ஆயிரத்திற்கு கொள்முதல் செய்கின்றனர்.

மழைக்கு உதிர்ந்த மாங்காய்கள் டன் ரூ.5 ஆயிரத்திற்கு கொள்முதல் செய்கின்றனர். இதனால் பராமரிப்பு, மருந்து, கூலி மற்றும் போக்குவரத்து செலவுகள் கூட கிடைப்பதில்லை. வருவாய் கிடைக்காவிட்டாலும், செலவு தொகையாவது கிடைக்கும் என்கிற நம்பிக்கை இழந்துவிட்டோம்.

எனவே, தமிழக அரசு நெல், கரும்புக்கு கொள்முதல் நிலையம் அமைக்கப்படுவது போல், கிருஷ்ணகிரியில் மாங்காய் கொள்முதல் நிலையம் அமைத்து விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Similar News