உள்ளூர் செய்திகள்
ரம்ஜானையொட்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.

புதுச்சேரியில் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம்

Published On 2022-05-03 14:33 IST   |   Update On 2022-05-03 14:33:00 IST
புதுச்சேரியில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டுள்ளது.
புதுச்சேரி:

இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ஒன்று புனித ரமலான் மாதத்தில் நோன்பு கடைபிடிப்பதாகும். இஸ்லாமிய காலண்டரில் 9-வது மாதம் ரமலான் மாதம் ஆகும்.

ஆண்டுதோறும் இந்த மாதத்தில் பிறை தொடங்கிய நாளில் இருந்து இஸ்லாமியர்கள் ரம்ஜான் நோன்பை கடைபிடிப்பார்கள். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ரம்ஜான் கடந்த மாதம் 3-ந்தேதி தொடங்கியது. அன்று முதல் ஒரு மாத காலம் இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து வந்தனர். இந்த ஒரு மாத நோன்பு முடிவடைந்தது.

ரம்ஜான் பண்டி கையை புதுவை  முழுவதும் இஸ்லாமியர்கள் சிறப்பாக கொண்டாடினார்கள். அதிகாலையிலேயே எழுந்து குளித்து புத்தாடைகளை அணிந்து மகிழ்ச்சியுடன் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். 

தமிழ்நாடு ஜவ்ஹீத் ஜமாஅத் சார்பில் புதுவை கடற்கரை சாலையில் காலை 7.30 மணிக்கு சிறப்பு தொழுகை நடந்தது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்று தொழுகை நடத்தினர். சிறப்பு தொழுகைக்கு பிறகு உலக நன்மை, கொரோனா தாக்கத்தில் இருந்து விடுபடுவது மற்றும் மழை வேண்டி தொழுகை நடத்தப்பட்டது. தொழுகை முடிந்ததும் அவர்கள் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

இதேபோல்  புதுவை எச்.எம் காசிம் சாலை முஹ்ஹிதியா பள்ளி வாசல், தேபேசம்பேட்டை மஸ்ஜிதே நூரானிய்யா பள்ளி வாசல், சாந்தாசாகிப்தெரு அஹமதியா பள்ளி வாசல், டி.எம். நகர் மஸ்ஜிதே அல்ஹமீதியா பள்ளிவாசல், நெல்லித்தோப்பு மஸ்ஜிதே சுல்தானிய்யா பள்ளி வாசல், பெரியக்கடை மஸ்ஜிதே இஸ்லாமியா, ஏனாம் வெங்கடாசலம் பிள்ளை தெரு மீராபள்ளிவாசல், முல்லா வீதியில் உள்ள முஹம்மதியா பள்ளி வாசல், காலாப்பட்டு மஸ்ஜிதே இபுராஹிம் பள்ளி வாசல் உள்ளிட்ட பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

Similar News