உள்ளூர் செய்திகள்
தவளக்குப்பத்தில் பெண் சாவில் மர்மம் இருப்பதாக அண்ணன் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:
தவவளக்குப்பம் ராஜீவ்காந்திநகரை சேர்ந்தவர் வெங்கடேசன். கட்டிட தொழிலாளி. இவரது மனைவி சந்தியா(வயது27). இவர்களுக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகிறது. ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது.
வெங்கடேசனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. அவ்வப்போது மது குடித்து விட்டு வெங்கடேசன் மனைவியிடம் தகராறு செய்வார்.
இந்த நிலையில் வெங்கடேசன் சந்தியாவின் அண்ணன் சதீசுக்கு போன் செய்து உன் தங்கை சந்தியாவை அடித்துவிட்டேன். அவருக்கு பேய் பிடித்துள்ளது. எனவே சந்தியாவை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்கிறேன் என்று கூறினார்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சதீஷ் தவளக்குப்பத்துக்கு விரைந்து வந்தார். அப்போது சதீ்சிடம் சந்தியா இறந்து விட்டதாக வெங்கடேசன் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து அக்கம் பக்கத்தில் சதீஷ் விசாரித்த போது வீட்டில் இருந்த குளிர்சாதன பெட்டியில் இருந்து மின் கசிவு ஏற்பட்டு சந்தியா மின்சாரம் தாக்கி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
வெங்கடேசன் மற்றும் அக்கம் பக்கத்தினர் தெரிவித்த வேறுபட்ட தகவல்களால் சந்தேகமடைந்த சதீஷ் தனது தங்கை சாவில் சந்தேகம் இருப்பதாக தவளக்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.