உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

கடல் அலையில் சிக்கி மாணவர் பலி

Published On 2022-05-02 14:34 IST   |   Update On 2022-05-02 14:34:00 IST
கடலில் நண்பர்களுடன் குளித்த போது ராட்சத அலையில் சிக்கி என்ஜீனியரிங் மாணவர் பலியானார்.
புதுச்சேரி:

புதுவை கோரிமேடு ஜிப்மர் குடியிருப்பை சேர்ந்தவர் ரமேஷ். இவர் ஜிப்மரில் முதுநிலை எழுத்தராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் யுவராஜ்(வயது20). இவர் மதகடிப்பட்டில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில் யுவராஜ் தனது நண்பர்களான லாஸ்பேட்டையை சேர்ந்த விக்னேஷ், வில்லியனூரை சேர்ந்த பாலசுப்பிரமணியன் ஆகியோருடன் புதுவை கடற்கரைக்கு வந்தார். பின்னர் அவர்கள் 3 பேரும் காந்திசிலை பின்புறம் கடலில் இறங்கி குளித்தனர். அப்போது எழுந்த ராட்சத அலை 3 பேரையும் கடலுக்கு இழுத்து சென்றது. உடனே  இதனை பார்த்து அங்கிருந்தவர்கள் அபய குரல் எழுப்பினர்.

இதையடுத்து சிலர் கடலில் மூழ்கிய 3 பேரையும் மீட்டனர். பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி யுவராஜ் பரிதாபமாக இறந்து போனார்.  மற்ற இருவரும் சிகிச்சை பெற்று  வீடு திரும்பினர்.

இதுகுறித்த புகாரின் பேரில் பெரியக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News