உள்ளூர் செய்திகள்
சிறுத்தை கடித்து பலியான குதிரையை காணலாம்

தளி அருகே சிறுத்தை கடித்து குதிரை உயிரிழப்பு

Published On 2022-05-01 15:37 IST   |   Update On 2022-05-01 15:37:00 IST
தளி அருகே சிறுத்தை கடித்து குதறியதில் பலியான குதிரைக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
தேன்கனிக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள தளி பகுதியை சேர்ந்தவர் அல்லி உல்லாகான். இவர் பண்ணையில் 20 குதிரைகள் வளர்த்து வருகிறார்.

இந்த நிலையில் இன்று காலை வனப்பகுதியில் இருந்து சிறுத்தை ஒன்று வெளியே வந்தது. அந்த சிறுத்தை அல்லி உல்லாகான் வளர்த்து வந்த குதிரையை கடித்து குதறியது. இதனால் அந்த குதிரை அலறியது.

உடனே அருகில் இருந்த குதிரையின் உரிமையாளர் வந்து பார்த்தபோது குதிரையை சிறுத்தை கடித்து குதறியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். சிறுத்தை கடித்ததில் குதிரை சிறிது நேரத்தில் இறந்தது.

இதுகுறித்து ஜவளகிரி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் வனத்துறை அலுவலர் சுகுமார், வனகாப்பாளர் கோபிநாத் ஆகியோர் விரைந்து வந்தனர். அப்போது சிறுத்தை கடித்து பலியான பெண் குதிரையை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். சிறுத்தை கடித்து குதறியதில் பலியான குதிரைக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.




Similar News