உள்ளூர் செய்திகள்
நாராயணசாமி தேர்தலில் போட்டியிடாதது ஏன்? நமச்சிவாயம் கேள்வி
நாராயணசாமி தேர்தலில் போட்டியிடாதது ஏன்? நமச்சிவாயம் கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுச்சேரி:
மண்ணாடிப்பட்டு தொகுதியில் ரூ. 30 லட்சம் திட்ட மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய ஆழ்துளை கிணறுகளை திறந்து மக்களுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் அமைச்சர் நமச்சிவாயம் கலந்து கொண்டு ஆழ்துளை கிணறுகளை இயக்கி தொடங்கி வைத்தார்.
பின்னர், அவர் நிருபர் களிடம் கூறியதாவது:-
முன்னாள் முதல்- அமைச்சர் நாராயணசாமி வாய் அடக்கத்துடன் பேச வேண்டும். தற்போது நடுத் தெருவில் யார் நிற்கிறார்கள் என்பது புதுவை மக்களுக்கு தெரியும். 5 ஆண்டு காலம் முதல் -அமைச்சராக இருந்து விட்டு தேர்தலில் நிற்க தைரியில்லாமல் பயந்து ஓடியவர் நாராயணசாமி.
எங்களை பற்றி பேச அவருக்கு தகுதியில்லை.5 ஆண்டு கால ஆட்சியில் நாராயணசாமி என்ன செய்தார் என்பது அனை வருக்கும் தெரியும். அவருக்கு முதல்- அமைச்சர் ரங்கசாமியை குறை கூற தகுதியில்லை.
தற்போது பிரதமர், மத்திய் உள்துறை மந்திரி ஆசியுடன் திட்டங்களை நிறைவேற்ற தொடங்கியுள்ளோம். இதனால் வயிற்று எரிச்சலில் தரம் கெட்ட வகையில் நாராயணசாமி பேசி வருகிறார். இது கண்டிக்கத்தக்கது.
கவர்னருடன் மாநில வளர்ச்சிக்கு ஒத்துழைத்து திட்டங்களை செயல் படுத்துகிறோம். தன்னால் செய்ய முடியாததை இப்போதைய முதல்-அமைச்சர், அமைச்சர்கள் செய்வதை நாராயணசாமியால் பொறுத்து கொள்ள முடிய வில்லை. புதுவையில் நடப்பது பொம்மை ஆட்சியல்ல. மக்கள் ஆட்சி.
முக்கியமாக பிரதமர் மோடியை குறை கூற முன்னாள் முதல் -அமைச்சர் நாராயணசாமிக்கு எந்த தகுதியும் இல்லை. முதல் அமைச்சராக இருந்த போது மோடியை சந்திக்க சென்ற போதெல்லாம் காங்கிரஸ் துண்டை எடுத்து விட்டுதான் நாராயணசாமி சந்தித்தார். நடிப்பதுதான் அவரது வாடிக்கை.
இவ்வாறு அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.