உள்ளூர் செய்திகள்
வீராம்பட்டினத்தில் வெளிநாட்டில் வேலை செய்பவர் வீட்டில் ரூ.10 லட்சம் நகையை யாரோ மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர்.
புதுச்சேரி:
புதுவை வீராம்பட்டினம் வடக்கு மேட்டு தெருவை சேர்ந்தவர் ஞானசேகரன் இவரது மனைவி லாவண்யா. இவர்களுக்கு திருமணமாகி 13 வருடங்கள் ஆகிறது. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
ஞானசேகரன் சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார். அங்கு சம்பாதிக்கும் பணத்தை சேமித்து ஊருக்கு வரும் போது நகையாக கொண்டு வருவார். அந்த நகைகளை லாவண்யா பாதுகாப்புக்காக கூனிமேட்டில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் கொடுத்து வைத்திருந்தார்.
இதற்கிடையே நிலம் வாங்கு வதற்காக லாவண்யா தனது பெற்றோர் வீட்டில் கொடுத்து வைத்திருந்த 27 பவுன் நகையை கடந்த சில நாட்களுக்கு முன்பு வாங்கி வந்து தனது வீட்டின் பீரோவில் வைத்திருந்தார்.
மேலும் பீரோவில் பூட்டு சரியில்லாததால் புதிதாக பூட்டுபோட்டு நகைகளை பாதுகாப்பாக வைத்தார். ஆனால் சாவியை பீரோவிலேயே தொங்க விட்டு இருந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று நிலம் வாங்க நகைகளை அடகு வைப்பதற்காக பீரோவில் வைத்திருந்த நகைகளை லாவண்யா எடுத்து சரிபார்க்க முயன்றார்.
அப்போது நகை அனைத்தும் காணாமல் போயிருப்பதை கண்டு லாவண்யா அதிர்ச்சி அடைந்தார். யாரோ மர்ம நபர்கள் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நோட்ட மிட்டு பீரோவை திறந்து நகைகளை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. கொள்ளை போன நகைகளின் மொத்த மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும்.
இது குறித்து லாவண்யா அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.