உள்ளூர் செய்திகள்
புதுவை மேலும் வளர்ச்சி அடையும்- வெங்கடேசன் எம்.எல்.ஏ அறிக்கை
மத்திய மந்திரி அமித்ஷா வருகையையொட்டி புதுவை மேலும் வளர்ச்சி அடையும் என்று வெங்கடேசன் எம்.எல்.ஏ. கூறினார்.
புதுச்சேரி:
புதுவை பா.ஜனதா நியமன எம்.எல்.ஏ. வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடந்த 24-ந் தேதிக்கு பிறகு புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஒரு புதுப்பொலிவு பெற்றுள்ளது என்று கூறலாம். ஏனென்றால் அன்றைய தினம் தான் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா புதுச்சேரிக்கு வந்த தினம். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கிட்டத்தட்ட ஒரு நாள் முழுவதும் புதுச்சேரியில் மக்களுக்காக செலவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கியமாக பா.ஜனதா என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி அரசு புதுச்சேரியில் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெறுகின்ற இந்த நிலையில் மத்திய உள்துறை மந்திரியின் வருகையானது புதுவைக்கு மேலும் வளர்ச்சியைக் கொடுக்கும் என்பதில் துளியும் ஐயமில்லை. பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் மற்றும் அறிவிப்புகளை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா புதுவைக்கு வந்து தொடங்கி வைத்து விட்டுச் சென்றுள்ளார்.
முக்கியமாக போக்கு வரத்து நெரிசலை மனதில் கொண்டு அவர் மேலும் ஒரு புதிய பஸ் நிலையத்தை அமைப்பதற்கான நிதியும் ஒதுக்கி அந்த திட்டத்தையும் தொடங்கி வைத்துச் சென்றுள்ளார். உருளையன்பேட்டை பேருந்து நிலையத்தை ரூ. 31 கோடி செலவில் உலகத்தரம் வாயந்த ஒரு பேருந்து நிலையமாக மாற்றுவதற்கும் அவர் பணிகளை தொடங்கி வைத்துள்ளார்.
இது போன்ற எண்ணற்ற திட்டங்களுக்கு மத்திய மந்திரி வழிவகை செய்துள்ளது புதுவை வளர்ச்சிக்கு பெரும் உதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. அதாவது வர்த்தகம் கல்வி ஆன்மீகம் சுற்றுலா ஆகியவற்றில் இந்தியா விலேயே தலைசிறந்த நகரமாக உயர்த்துவதற்கு பிரதமர் உறுதி கொண்டார்.
அதனை நாங்கள் அடுத்த தேர்தலுக்கு முன்னதாக அதற்கு முழு வடிவம் கொடுத்த பின்னரே மக்களாகிய உங்களை வந்து மீண்டும் சந்திப்போம் என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உறுதி கொண்டு இருப்பது இந்த நிலையில் வரவேற்கத்தக்க விஷயம் ஆகும். எனவே அடுத்த ஓரிரு ஆண்டுகளில் புதுவை, வர்த்தகம் கல்வி ஆன்மீகம் சுற்றுலாவில் உலகத்தரம் வாய்ந்த ஒரு வளர்ச்சியை சிறந்த புதுவை என்ற பெயரில் அடையும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.
இவ்வாறு வெங்கடேசன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.