உள்ளூர் செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட குட்கா

பெங்களூருவில் இருந்து சென்னைக்கு கடத்திய ரூ.9 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்

Published On 2022-04-16 08:09 GMT   |   Update On 2022-04-16 08:09 GMT
பெங்களூருவில் இருந்து சென்னைக்கு கடத்திய ரூ.9 லட்சம் மதிப்பிலான குட்காவை பறிமுதல் செய்த போலீசார் ஒருவரை கைது செய்தனர்.
பள்ளிகொண்டா:

வேலூர் மாவட்டத்தில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் நடமாட்டத்தை அறவே ஒழிக்க வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி போலீசார் ஆங்காங்கே வாகன சோதனை செய்து குட்கா பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

மேலும் பெங்களூருவில் இருந்து வேலூர் வழியாக சென்னைக்கு குட்கா பொருட்கள் கார் வேன்களில் அடிக்கடி கடத்தி செல்லப்படுகிறது.

இதனை தடுக்க போலீசார் பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று இரவு பள்ளிகொண்டா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீஸ்காரர்கள் ஷியாம் சுந்தர், சத்ரியன் உள்ளிட்ட போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

நள்ளிரவு 12 மணி அளவில் பெங்களூருவிலிருந்து வேன் ஒன்று வேகமாக வந்தது. போலீசார் வேனை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் தடை செய்யப்பட்ட ரூ.9.09 லட்சம் மதிப்பிலான குட்கா மற்றும் பான் மசாலா பொருட்கள் சென்னைக்கு கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து வேனை ஓட்டி வந்த ஓசூரை சேர்ந்த கார்த்திக் (வயது 28) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் வேன் மற்றும் குட்கா பொருட்களை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

Similar News