உள்ளூர் செய்திகள்
குடிபோதையில் ரகளை செய்த வடமாநில வாலிபர்

சோதனை சாவடியில் குடிபோதையில் ரகளை செய்த வடமாநில வாலிபரால் பரபரப்பு

Published On 2022-04-09 12:01 IST   |   Update On 2022-04-09 12:01:00 IST
கடும் குடிபோதையில் சுமார் ஒரு மணி நேரம் பண்ணாரி சோதனை சாவடியில் ஈடுபட்ட வடமாநில வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.
சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரியில் காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் சோதனைச்சாவடி அமைந்துள்ளது.

இந்நிலையில் நேற்று மாலை சோதனை சாவடியில் குடிபோதையில் வந்த வடமாநில வாலிபர் ஒருவர் அந்த வழியாக சென்று கொண்டிருந்த வாகனங்களை வழிமறித்து வாகனங்கள் செல்ல முடியாமல் சாலையில் படுத்துக்கொண்டு தகராறில் ஈடுபட்டார்.

இதைக்கண்ட சோதனைச் சாவடியில் இருந்த போலீசார் சாலையில் படுத்து தகராறில் ஈடுபட்டு கொண்டிருந்த அந்த வாலிபரை அப்புறப்படுத்தினர். அப்போது குடிபோதையில் இருந்த அந்த வாலிபர் போலீசார் மற்றும் வனத்துறையினரை தாக்க முற்பட்டதோடு சாலையில் செல்லும் வாகனங்கள் மீது கற்களை வீசுவது போல் ரகளையில் ஈடுபட்டார்.

பின்னர் சிறிது நேரம் கழித்து சம்பவ இடத்திற்கு வந்த மற்றொரு வடமாநில வாலிபர் ரகளையில் ஈடுபட்டு கொண்டிருந்த வாலிபர் தன்னுடன் பண்ணாரி கோவிலுக்கு வந்ததாகவும், நாங்கள் 2 பேரும் திருப்பூர் மாவட்டம் அவினாசி பகுதியில் உள்ள நூற்பாலையில் பணியாற்றி வருவதாகவும், ரகளையில் ஈடுபட்ட நபர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரிவித்தார்.

இதனையடுத்து போலீசார் அந்த வாலிபருடன் அவரை அனுப்பி வைத்தனர். 

Similar News