உள்ளூர் செய்திகள்
அலகு குத்தி, பறவைக்காவடி எடுத்து ஊர்வலமாக வந்த பக்தர்கள்.

அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி வழிபாடு

Published On 2022-04-06 13:59 IST   |   Update On 2022-04-06 13:59:00 IST
அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் விழா இன்று காலை நடத்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அந்தியூர்:

அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் விழா இன்று காலை நடத்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

 அந்தியூர் பஸ் நிலையம் அருகே புகழ்பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் குண்டம் தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பண்டிகை நடைபெறவில்லை. இந்த நிலையில் இந்த ஆண்டு கடந்த மாதம் 17-ந் தேதி பூச்சாட்டுதலுடன் பண்டிகை தொடங்கியது.

இதனை தொடர்ந்து மகிஷாசுர வர்தனம் எனும் எருமைக் கிடாய் வெட்டும் நிகழ்வு நடைபெற்றது.

இதனையடுத்து 29-ந் தேதி கிராம சாந்தி நிகழ்ச்சியும், 30&ந் தேதி காலை 11 மணிக்கு கொடியேற்றும் நிகழ்வும் நடைபெற்றது.

திருவிழாவில் இரவு நேரத்தில் அம்மன் பூத வாகனம், நரி வாகனம்,சிம்ம வாகனம் ஹம்ச வாகனம் யானை வாகனம் சட்டத் தேர் புஷ்ப பல்லாக்கு வாகனங்களில் தினந் தோறும் அந்தியூர் முக்கிய வீதிகள் வழியாக வீதி உலா  வந்து பக்தர் களுக்கு அருள்பாலித்தார்.

இதனைத்தொடர்ந்து குண்டம் திருவிழா நடைபெற்றது. நேற்று இரவு குண்டம் பற்ற வைக்கப்பட்டது.  இன்று அதிகாலை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கி தங்களுடைய வேண்டுதலை நிறைவேற்றினர்.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா அச்சுறுத்தல்  காரணமாக பண்டிகை நடைபெறாமல் இருந்த நிலையில் இந்த ஆண்டு திருவிழா நடைபெற்றதால் பக்தர்கள் அதிக அளவில் வந்திருந்தனர். 

டி.எஸ்.பி. கார்த்திகேயன், மது விலக்கு டி.எஸ்.பி. சண்முகம் தலைமையில்  100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னதாக குண்டம் இறங்குவதற்காக தவுட்டுப் பாளையம் மாரியம்மன் கோவில் பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி, பறவைக்காவடி எடுத்து கோவிலுக்கு வந்தனர்.

தொடர்ந்து 8-ந் தேதி மாலை தேர் திருவிழா தொடங்கி 11-ந் தேதி வரை அம்மன் முக்கிய வீதிகள் வழியாக பக்தர் களுக்கு அருள்பாலித்து  மாலை நிலையை வந்து அடையும். 12-ந் தேதி பரிவேட்டையும், 13-ந் தேதி வசந்தோற்சவம் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவடைகிறது.

Similar News