ஆன்லைன் மோசடி கும்பலிடம் ரூ.1.67 லட்சம் பணத்தை இழந்த ஈரோடு பெண்
ஈரோடு:
ஈரோடு பெரியார் நகரை சேர்ந்த திருமணமான பெண் ஒருவர் தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளையில் கணக்கு வைத்திருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது செல்போன் எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் ஒரு லிங்க் அனுப்பப்பட்டிருந்தது.
அதில் உங்களது வங்கி கணக்கு குறித்த விவரங்கள், பான் கார்டு விவரங்களை தெரிவிக்கவும் என கூறப்பட்டிருந்தது. இதை உண்மை என நம்பிய அந்த பெண் அந்த ஆன்லைன் லிங்கில் சென்று வங்கி குறித்த விவரங்களை தெரிவித்தார்.
பின்னர் சிறிது நேரத்தில் அவர் செல்போன் எண்ணுக்கு ஒரு ஓ.டி.பி. நம்பர் வந்துள்ளது. அந்த எண்ணை அவர் அழுத்தினார். பின்னர் சிறிது நேரத்தில் அவரது செல்போன் எண்ணிற்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில் உங்கள் வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்து 67 ஆயிரத்து 920 எடுக்கப்பட்டுள்ளது என வந்திருந்தது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் வங்கிக் கிளைக்கு சென்று விசாரித்துள்ளார். அப்போது தான் அவரை மோசடி கும்பல் ஏமாற்றியது தெரியவந்தது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் ஈரோடு சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.