உள்ளூர் செய்திகள்
அரசு பஸ்-லாரி மோதிய விபத்தில் கண்டக்டர் பலி
சித்தோடு அருகே அரசு பஸ்-லாரி மோதிய விபத்தில் கண்டக்டர் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சித்தோடு:
சித்தோடு அருகே அரசு பஸ்-லாரி மோதிய விபத்தில் கண்டக்டர் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூரில் இருந்து திருப்பூர் நோக்கி இன்று அதிகாலை அரசு பஸ் ஒன்று சென்று கொண்டு இருந்தது. பஸ்சை தர்மபுரி மாவட்டம் கனகத்தூர் பாவடி தெரு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (52) என்பவர் ஓட்டி சென்றார். கண்டக்டராக இரும்பத்தூர் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (46) என்பவர் இருந்துள்ளார்.
இவர்கள் 2 பேரும் பயணிகளை ஏற்றிக்கொண்டு இன்று அதிகாலை சுமார் 3 மணி அளவில் சேலம்-கோவை பைபாஸ் ரோடு சித்தோடு அருகே உள்ள கங்காபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது அரசு பஸ் முன்னே சென்று கொண்டிருந்த லாரியை முந்தி சென்று உள்ளது.
இதில் எதிர்பாராத விதமாக லாரியின் பக்கவாட்டில் அரசு பஸ் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பஸ் முன் பக்கம் அப்பளம் போல் நொறிங்கியது. மேலும் இந்த விபத்தில் கண்டக்டர் சக்திவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். டிரைவர் ராஜேந்திரன் மற்றும் பயணிகள் சிலர் காயத்துடன் உயிர் தப்பினர்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த சித்தோடு போலீசார் சம்பவயிடத்திற்கு வந்து பலியான சக்திவேலின் உடலை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.