உள்ளூர் செய்திகள்
பள்ளிக்கு நடந்து வந்து கல்வி பயிலும் மாணவர்களுக்கு சொந்த செலவில் ஆட்டோ வாங்கி கொடுத்த ஆசிரியர்கள்
சங்கராபுரம் அருகே பள்ளிக்கு நடந்து வந்து கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள், சொந்த செலவில் ஆட்டோ வாங்கி கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சங்கராபுரம்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே சோழம்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 130 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளிக்கு மூரார்பாளையம், வனக்காடு, நெடுமானூர், காட்டுக்கொட்டாயர் போன்ற பகுதியில் இருந்து மாணவ-மாணவிகள் வருகின்றனர்.
போதிய பஸ் வசதி இல்லாததால் இந்த கிராமங்களில் இருந்து 8 கிலோ மீட்டர் நடந்தே பள்ளிக்கு வருகின்றனர். இதனால் மாணவர்களில் பள்ளி படிப்பை நிறுத்தி விடலாம் என பெற்றோர்கள் முடிவு செய்னர். இதனை அறிந்த பள்ளி தலைமை ஆசிரியர் கந்தசாமி மற்றும் ஆசிரியர்கள் திலிப்குமார், ஜோஸ்பின்மேரி, கலையரசி, சுதா,சாஷிதாபேகம் ஆகியோர் முன்வந்து தங்களது சொந்த செலவில் மாணவர்கள் பள்ளிக்கு வந்து செல்ல ஆட்டோ வாங்கி கொடுத்தனர். குறைந்த ஊதியத்தில் ஆட்டோவை ஓட்டுவதற்கு வேல்முருகன் என்பவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
இது பற்றி பள்ளி தலைமை ஆசிரியர் கந்தசாமி கூறியதாவது:-
பள்ளிக்கு மாணவ-மாணவிகள் நடந்து செல்வதை பார்த்து மனவேதனை அடைந்தேன். அப்போது 2 மாணவர்கள் சோர்ந்து போய் கீழே அமர்ந்திருந்தனர். அதைப் பார்த்த நான் மாணவர்கள் ஏன் வகுப்பிற்கு செல்லவில்லை என்று விசாரித்த போது நடந்து வந்ததால் கால் வலி, உடல் சோர்வு, மற்றும் பசி மயக்கம் என்று கூறினார்கள்.
உடனே நான் எனது மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று காலை உணவு வாங்கி கொடுத்தேன். உடனடியாக இதே போன்று எத்தனை மாணவர்கள் நடந்து பள்ளிக்கு வருகிறார்கள் என்று கணக்கெடுத்தேன். இதில் 15-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் வருகிறார்கள் என தெரிந்தது.
இது தொடர்பாக உடனடியாக என்னுடன் பனியாற்றும் ஆசிரியர்களிடம் ஒன்று கூடி முடிவு எடுத்து எங்களது சொந்த செலவில் பணம் சேர்த்து ஆட்டோ வாங்கினோம். அனைத்து மாணவ- மாணவிகளுக்கும் முககவசம் மற்றும் சானிடைசர் மற்றும் வாந்தி, தலைவலி, காய்ச்சல், சிறு காயங்கள் போன்றவற்றிக்கு பள்ளியில் முதலுதவி அளிக்க ஏற்பாடு செய்தோம். இவ்வாறு அவர் கூறினார்.