உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

தொழிலாளியை தாக்கி கொலை மிரட்டல்

Published On 2022-03-13 10:15 IST   |   Update On 2022-03-13 10:15:00 IST
மதுகுடிக்க பணம் கொடுக்க மறுத்ததால் தொழிலாளியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
புதுச்சேரி:

கும்பகோணத்தை சேர்ந்தவர் பால்ராஜ்(வயது51). இவர் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்தை விட்டு பிரிந்து புதுவை நகர பகுதியில் கடைகளில் கூலி வேலை செய்து இரவு நேரங்களில் நேரு வீதியில் உள்ள பிளாட்பார கடைகளில் தூங்குவது வழக்கம்.

இவரிடம் அவ்வப்போது கண்டாக்டர் தோட்டத்தை சேர்ந்த கருணா என்ற வாலிபர் மது குடிக்க பணம் கேட்பார். பால்ராஜும் அவருக்கு பணம் கொடுத்து வந்தார்.

சம்பவத்தன்று பால்ராஜ் நேரு வீதியில் உள்ள ஒரு பேக்கரி கடை முன்பு தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது கருணா மது குடிக்க பால்ராஜிடம் பணம் கேட்டார். அதற்கு பால்ராஜ் தன்னிடம் தற்போது பணம் இல்லை என்று கூறினார். இதனால் ஆத்திரமடைந்த கருணா தகாத வார்த்தைகளால் திட்டி கீழே கிடந்த கருங்கலை எடுத்து பால்ராஜை தாக்கினார்.

மேலும் இதுபற்றி போலீசில் புகார் செய்தால் கொலை செய்து விடுவேன் என்று பால்ராஜை மிரட்டி விட்டு கருணா தப்பி சென்று விட்டார்.

இந்த தாக்குதலில் கண்ணில் பலத்த காயமடைந்த பால்ராஜை அங்கிருந்த ஆட்டோ டிரைவர்கள் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்ற பால்ராஜ் பின்னர் நடந்த சம்பவம் குறித்து பெரியக்கடை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கருணாவை தேடி வருகிறார்கள்.

Similar News