உள்ளூர் செய்திகள்
மாணவி தற்கொலை

செல்போனை தாய் பறித்துக்கொண்டதால் பிளஸ்-2 மாணவி எலி மருந்து தின்று தற்கொலை

Published On 2022-03-11 12:31 IST   |   Update On 2022-03-11 12:31:00 IST
திருபுவனை அருகே செல்போனை தாய் பறித்துக்கொண்டதால் பிளஸ்-2 மாணவி எலிமருந்து தின்று தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி:

திருபுவனை அருகே சிலுக்காரிபாளையம் மயிலம் பாதை பகுதியை சேர்ந்தவர் தங்கத்துரை. இவர் சாலை பணி மேற்கொள்ளும் காண்டிராக்டராக உள்ளார்.

இவரது மனைவி புஷ்பவதி. இவர்களது மகள் ‌ஷகி (வயது 16). இவர் திருபுவனையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

‌ஷகி வீட்டில் இருக்கும் போது எப்போதும் செல்போனை பார்த்துக் கொண்டு இருந்தார். இதனை அவரது தாய் புஷ்பவதி கண்டித்து வந்தார்.

இதுபோல் சம்பவத்தன்று மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பிய ‌ஷகி செல்போனை வெகுநேரமாக பார்த்துக் கொண்டு இருந்தார். இதனை அவரது தாய் கண்டித்தார்.

பொது தேர்வு நடைபெற உள்ள நிலையில் படிக்காமல் இப்படி ஏன் செல்போன் பார்த்துக் கொண்டு இருக்கிறாய்? என கேட்டு செல்போனை புஷ்பவதி பறித்து வைத்துக் கொண்டார்.

இதனால் மன வருத்தம் அடைந்த ‌ஷகி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வீட்டில் இருந்த எலி மருந்தை எடுத்து தின்று விட்டார்.

ஆனால், இதனை ‌ஷகி யாரிடமும் சொல்லவில்லை. 2 நாள் கழித்து ‌ஷகிக்கு திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டதால் அவரிடம் தாய் புஷ்பவதி விசாரித்த போது எலி மருந்தை தின்று விட்ட தகலை தெரிவித்தார்.

உடனே ‌ஷகியை அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதிர்காமம் மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மதியம் ‌ஷகி பரிதாபமாக இறந்து போனார்.

இதுகுறித்து புஷ்பவதியின் உறவினர் பரமசிவம் கொடுத்த புகாரின் பேரில் திருபுவனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Similar News