உள்ளூர் செய்திகள்
மரப்பாலம் சந்திப்பில் கடும் நெரிசல்
அண்ணா நகரில் பாலத்துக்கு அடித்தளம் அமைக்கும் பணியால் மரப்பாலம் சந்திப்பில் கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவை மேட்டுப் பாளையத்தில் இருந்து வரும் மேட்டு வாய்க்கால், ரெட்டியார்பாளையம், பூமியான்பேட்டை, இந்திரா காந்தி சதுக்கம், அண்ணாநகர், அய்யனார் நகர் வழியாக உப்பனாற்றில் கலக்கிறது.
மழைநீர் வடியும் முக்கிய வாய்க்காலான இதில் பூமியான்பேட்டை, அண்ணாநகர் எதிரில் சாலையின் குறுக்கே செல்லும் வாய்க்கால் தூர்ந்து போனது.
இதனால் மழைகாலத்தில் தண்ணீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டது. மழைநீர் விரைவாக வெறியேற பூமியன்போட்டை சந்திப்பில் ரூ.66 லட்சத்தில் ப்ரீகாஸ்ட் முறையில் சிறிய பாலம் கட்டப்பட்டது.
அதேபோல நெல்லித் தோப்பு அண்ணா நகர் எதிரில் சாலையின் குறுக்கே 27 மீட்டருக்கு சிறிய பாலம் கட்டும் பணி ரூ.1.75 கோடியில் தொடங்கியுள்ளது. இதற்காக இந்திராகாந்தி சிக்னல் எதிர்புறம் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
5 நாட்களுக்கு இந்த போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அண்ணாநகர் எதிரே சாலையின் நடுவே பெரிய பள்ளம் தோண்டப்பட்டு, ஏற்கனவே அமைக்கப்பட்டு இருந்த சாய்தளம் அமைப்பு அகற்றும் பணி நடந்து வருகிறது.
பாலத் துக்கான அடித்தளம் அமைக்கப்பட உள்ளது. ப்ரீகாஸ்ட் முறையில் தயாரித்து வைத்துள்ள 27 கான்கிரீட் பெட்டிகளை பயன்படுத்தி சிறிய பாலம் அமைக்கப்பட உள்ளது. போக்குவரத்தில் மாற்றம் செய்திருப்பதால் மரப்பாலம் சந்திப்பு கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி உள்ளது.
சென்னை, விழுப்புரம், கடலூர் என அனைத்து மார்க்கத்திலும் இருந்து வரும் வாகனங்கள் மரப்பாலத்தை கடந்து புவன்கரே வீதி வழியாக பஸ் நிலையத்தை அடைந்தன. பஸ் நிலையத்தில் இருந்து வந்த வாகனங்கள் கடலூர் சாலை வழியாக மரப்பாலம் வந்து செல் கின்றன.
இதனால் மரப்பாலம் முதல் அரியாங்குப்பம் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன. போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளதால் இப்பகுதியில் கூடுதலாக போலீசாரை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.