உள்ளூர் செய்திகள்
மோட்டார் சைக்கிள் விபத்தில் கணவன்-மனைவி காயம்
கரிக்கலாம்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் கணவன்-மனைவி உள்பட 3 பேர் காயமடைந்தனர்.
புதுச்சேரி:
வில்லியனூர் அருகே திருக்காஞ்சி காலனி பெரியார் வீதியை சேர்ந்தவர் ராஜி(வயது49). வெல்டராக வேலை செய்து வருகிறார்.
நெல்லிக்குப்பத்தில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக தனது மனைவி கலைவாணி(38), மகன் தொல்காப்பியன்(13) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.
கரிக்கலாம்பாக்கம்-பாகூர் செல்லும் ரோட்டில் செங்கான்ஓடைகுளம் அருகே செல்லும் போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக ராஜி ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட ராஜி, அவரது மனைவி கலைவாணி மற்றும் மகன் தொல்காப்பியன் ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர். உடனே அங்கிருந்தவர்கள் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக் காக கரிக்கலாம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இதில் தொல்காப்பியன் மேல் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டான்.
இந்த விபத்து குறித்து வில்லியனூர் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுவை குருமாம்பேட் அமைதி நகரை சேர்ந்தவர் வாழுமுனி. கட்டிட தொழிலாளி. இவர் நேற்று காலை கட்டிட வேலைக்காக தன்னுடன் சித்தாளாக வேலை பார்க்கும் குனிஜெராய்(44) என்ற பெண்ணை மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு வழுதாவூர் சாலையில் வந்துகொண்டிருந்தார்.
அய்யங்குட்டிப்பாளையம் அய்யனார் கோவில் அருகே வந்த போது எதிரே வந்த ஜே.சி.பி. எந்திரம் வாழுமுனி ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தடுமாறி விழுந்த குனிஜெராய்க்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் கோரிமேடு போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.