உள்ளூர் செய்திகள்
கள்ள நோட்டு கொடுத்து மது வாங்கிய 2 வாலிபர்கள் கைது
கள்ள நோட்டு கொடுத்து மதுபானம் வாங்கிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி திருவள்ளுவர் சாலையில் தனியார் மதுபான கடை உள்ளது. இந்த கடைக்கு 2 வாலிபர்கள் வந்து மதுபானங்கள் கேட்டனர்.
அந்த மதுபானங்களுக்குரிய பணத்தை வாலிபர்கள் கொடுத்தனர். அதனைப் பெற்றுக் கொண்ட கடை ஊழியர் குமார் அது கள்ள நோட்டு என்பதை கண்டுபிடித்தார். உடனே அந்த வாலிபர்கள் 2 பேரையும் பிடித்து உருளையன்பேட்டை போலீசில் ஒப்படைத்தார்.
அவர்களிடம் இன்ஸ்பெக்டர் பாபுஜி மற்றும் போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதில் அவர்கள் முதலியார் பேட்டை நைனார் மண்டபம் 2-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்த குமார் என்பவரின் மகன் மனோஜ் குமார் (வயது 29), பிள்ளை தோட்டத்தை சேர்ந்த விஜய குமார் என்பவரின் மகன் ஜெயபால் (21) என்பது தெரியவந்தது.
அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். மனோஜ் குமார், ஜெயபால் ஆகியோருக்கு கள்ளநோட்டு எப்படி கிடைத்தது? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.