உள்ளூர் செய்திகள்
கைது

கலெக்டர் பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி பணம் பறிக்க முயற்சி- வடமாநில சிறுவன் கைது

Published On 2022-03-07 16:33 IST   |   Update On 2022-03-07 16:33:00 IST
செங்கல்பட்டு மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் கடந்த மாதம் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார்.
செங்கல்பட்டு:

செங்கல்பட்டு மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் கடந்த மாதம் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அந்த புகார் மனுவில் தன்னுடைய முகநூல் பக்கத்தில் உள்ள புகைப்படத்தை எடுத்து யாரோ மர்ம நபர் போலியான கணக்கு தொடங்கி தன்னுடைய நண்பர்களிடம் பணம் பறிக்க முயன்றதாக புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சம்பந்தப்பட்ட நபர் ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டத்தில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் தனசேகரன், போலீசார் கலைவாணன், மெகபூப் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் ராஜஸ்தான் மாநிலம், பரத்பூர் மாவட்டம் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இந்த குற்றத்தை செய்தவர் ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. போலீசார் அந்த சிறுவனை கைது செய்து செங்கல்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.

Similar News