உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

பெயிண்டரை ஓட,ஓட விரட்டி வெட்டிய கும்பல்

Published On 2022-03-07 14:37 IST   |   Update On 2022-03-07 14:37:00 IST
மதுக்கடையில் ஏற்பட்ட தகராறில் பெயிண்டரை சரமாரியாக வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
புதுச்சேரி:

புதுவை திலாசுப்பேட்டை வீமன் நகர் சிமெண்டு ரோட்டை சேர்ந்தவர் மோகன்  என்ற சத்தியசீலன் (வயது 29) பெயிண்டர். 

இவர் அங்குள்ள மதுக்கடை ஒன்றில் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது  அருகில் அதே பகுதியை சேர்ந்த நடேசன், திருமலை ஆகியோர் மது அருந்திக் கொண்டிருந்தனர். 

மதுபோதையில் நடேசன், திருமலை ஆகியோர் மோகனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் அவர்களுக்குள் கைகலப்பும் ஏற்பட்டுள்ளது.  அங்கிருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.

இதனையடுத்து திலாசுப்பேட்டை பிள்ளையார்கோவில் அருகே மோகன் நடந்து சென்றுக் கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த நடேசனின் நண்பர்கள், அப்பு, துரைராஜ் ஆகியோர் அவரை வழிமறித்து தகாத வார்த்தையால் திட்டி, கத்தி மற்றும் அரிவாளால் சரமாரியாக நெற்றி, முதுகு ஆகிய பகுதிகளில் வெட்டினர். 

மேலும் அவரை வாய்க்காலில் தள்ளி, செங்கல் மற்றும் சிமெண்ட் கற்களால் அடித்துள்ளனர். அவர்களிடமிருந்து மோகன் தப்பித்து வீட்டிற்கு ஓடி வந்துள்ளார். ஆனால் வீட்டின் அருகே அவரை சுற்றி வளைத்த அப்பு, துரைராஜ், நடேசன், கார்த்தி ஆகியோர் அவரை மீண்டும் தாக்கியுள்ளனர். 

மோகனின் அலறல் சத்தம் கேட்டு அவரது தங்கை அனிதா வெளியில் வந்துள்ளார். அப்போது துரைராஜ் அனிதாவின் கன்னத்தில் அறைந்து அவரை கீழே தள்ளியுள்ளார். அக்கம் பக்கத்தினர்  திரண்டு வரவே அவர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். கத்தி மற்றும் அரிவாளால் வெட்டியதில் படுகாயமடைந்த மோகன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
இதுகுறித்து கோரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து மோகனை வெட்டிய கும்பலை   தேடி வருகின்றனர்.

Similar News