உள்ளூர் செய்திகள்
அரசு பணிக்கான வயது உச்சவரம்பை உயர்த்த வேண்டும்-திமுக வலியுறுத்தல்
அரசு பணிக்கான வயது உச்சவரம்பை 40 ஆக உயர்த்த வேண்டும் என்று தி.மு.க. வலியுறுத்தியுள்ளது.
புதுச்சேரி:
புதுவை சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், தி.மு.க. மாநில அமைப்பாளருமான சிவா வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது:-
புதுவையில் கடந்த 8 ஆண்டுகளாக அரசு பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறவில்லை. இதன் மூலம் புதுவை இளைஞர்களின் வேலை வாய்ப்பை அரசே பறித்து வருகின்றது. இதன் காரணமாக புதுவை இளைஞர்கள் கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர்.
இதை கண்டித்து தி.மு.க. கடந்த சில ஆண்டுகளாகவே அரசுப்பணிகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றது.
சட்டசபை தேர்தலின் போது என்.ஆர்.காங்கிரஸ் புதுவை அரசுத்துறையில் உள்ள 9 ஆயிரத்து 400 காலிப் பணியிடங்களும் ஒரு ஆண்டிற்குள் எந்தவிதக் குற்றச்சாட்டுகளுக்கும் இடங்கொடுக்காமல் நிரப்பப்படும். வயது முதிர்ந்து அரசுப் பணிக்கு விண்ணப்பிக்கும் தகுதியை இழந்த இளைஞர்களுக்கு வாய்ப்பு அளித்து உதவும் விதமாக வயது உச்சவரம்பு 40 வயதாக உயர்த்தப்படும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டது.
ஆனால் இதுவரை அரசுப்பணிகளில் எந்த வேலைவாய்ப்புக்கும் விண்ணப்பங்கள் கோரப் படவில்லை. ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் உடனடியாக தேர்தலில் அறிவித்தபடி 9 ஆயயிரத்து 400 காலிப்பணியிடங்களையும் நிரப்ப முன்வர வேண்டும். அரசுப்பணிக்கு விண்ணப்பிக்கும் வாய்ப்பை இழந்துள்ளவர்களுக்கும் வாய்ப்பு அளிக்கும் வகையில் அரசு பணியில் சேர்வதற்கான வயது உச்சவரம்பு 40 ஆக உயர்த்தப்பட வேண்டும்.
இவ்வாறு சிவா எம்.எல்.ஏ. அறிக்கையில் கூறியுள்ளார்.