உள்ளூர் செய்திகள்
அரசே மதுவை கொள்முதல் செய்ய வேண்டும்-அ.தி.மு.க. யோசனை
நிதி நெருக்கடியை தவிர்க்க அரசே மதுவை கொள்முதல் செய்ய வேண்டும் என்று அன்பழகன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவை அ.தி.மு.க. கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசு வரும் நிதியாண்டுக்கு ரூ.ஆயிரத்து 729 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. கூடுதலாக ரூ.2 ஆயிரம் கோடி வழங்க மாநில அரசு கோரியுள்ளது. இதை தராவிட்டால் மாநில அரசு கடும் நிதி நெருக்கடியில் சிக்கும். மாநில வருவாயை பெருக்குவது அரசின் கடமை.
புதுவையில் மதுபான விற்பனையில்தான் வருவாய் கிடைக்கிறது. கலால்துறை மூலம் ரூ.ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கிறது. இதை இருமடங்காக உயர்த்த முயற்சிக்க வேண்டும்.
புதுவையில் 5 மதுபான தொழிற்சாலைகள், 85 மொத்த வியாபார உரிமம், 500-க்கும் மேற்பட்ட சில்லரை வியாபார உரிமங்கள் அனைத்தும் தனியார் வசம் உள்ளது. மதுபான விற்பனையில் பொதுவான முறையை இவர்கள் பின் பற்றுவதில்லை. போலி மது, வரி கட்டாமல் கணக்கு காட்டாத மது விற்பனையால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
இதை தடுக்க புதுவை அரசு சார்பில் நிறுவனம் ஒன்றை ஏற்படுத்தி அதன்மூலம் மதுபானங்களை கொள்முதல் செய்து அரசே சில்லரை கடைகளுக்கு விற்பனை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.