உள்ளூர் செய்திகள்
கைது

முகவரி கேட்பது போல் நாடகமாடி பெண்ணிடம் நகை பறித்த வாலிபர் கைது

Published On 2022-03-04 15:57 IST   |   Update On 2022-03-04 15:57:00 IST
பெண்ணிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட வாலிபரை கைது செய்த போலீசார் செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
வண்டலூர்:

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் உயிரியல் பூங்கா அருகே உள்ள ஓட்டேரி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சுசீலா(வயது 58). இவர் நேற்று முன்தினம் தனது வீட்டிலிருந்து வெளியே வரும்போது முகவரி கேட்பது போல் நடித்த வாலிபர் திடீரென சுசீலா அணிந்து இருந்த 5 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடினார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சுசீலா கூச்சலிட்டார். இவரது சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் நகையை பறித்துக்கொண்டு தப்பி ஓடிய வாலிபரை மடக்கி பிடித்து ஓட்டேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தியிடம் ஒப்படைத்தனர். பிடிபட்ட வாலிபரிடம் சப்-இன்ஸ்பெக்டர் விசாரித்த போது அவர் தாம்பரம் ரெயில்வே ஸ்டேஷன் பகுதியை சேர்ந்த குமார்(28) என்பது தெரிய வந்தது.

இது குறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட வாலிபரை கைது செய்து செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Similar News