உள்ளூர் செய்திகள்
மதுக்கடை கேஷியருக்கு பீர்பாட்டில் குத்து
அரியாங்குப்பத்தில் மதுக்கடை கேஷியரை பீர்பாட்டிலால் குத்திய 4 பேரை போலீசார் தேடிவருகிறார்கள்.
புதுச்சேரி:
அரியாங்குப்பம்- வீராம்பட்டினம் ரோட்டில் தனியார் மதுக்கடை உள்ளது. இந்த மதுபான கடையின் உரிமையாளரின் மகன் விக்கி சம்பவத்தன்று மதுக்கடையில் கேஷியராக வேலை பார்க்கும் மணவெளி கிராமத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன் (வயது 28) என்பவருடன் நோணாங்குப்பம் பகுதியில் உள்ள தனியார் ஓட்டல் அருகில் பேசிக்கொண்டு இருந்தார்.
அப்போது அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் அங்கு வந்து அவர்களிடம் வீண் தகராறு செய்தார். இதனைத்தொடர்ந்து முத்துக்கிருஷ்ணனும், விக்கியும் மதுக்கடைக்கு திரும்பினர்.
இந்த நிலையில் ஆத்திரம் அடைந்த முருகன் மற்றும் அவரது கூட்டாளிகளான தாஸ் என்ற ராமதாஸ், சிவகுரு, அன்பு ஆகியோருடன் மதுக்கடைக்கு வந்து விக்கியை தாக்க முயன்றனர். இதனை தடுக்க முயன்ற கேஷியர் முத்துகிருஷ்ணனை அந்த கும்பல் சரமாரியாக தாக்கி அங்கிருந்த பீர்பாட்டிலால் குத்திவிட்டு கடையை சூறையாடி தப்பி சென்றனர்.
படுகாயமடைந்த முத்து கிருஷ்ணன் சம்பவ இடத்தில் மயங்கி போனார். இதனால் அவர் இறந்துவிட்டார் என்று காட்டுத்தீ போல அப்பகுதியில் பரவியது. மேலும் அப்பகுதியில் பதட்டம் நிலவியது. தகவல் அறிந்தவுடன் அரியாங்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அங்கு படுகாயமடைந்து மயங்கிய நிலையில் கிடந்த முத்துகிருஷ்ணனை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் தற்போது முத்துகிருஷ்ணன் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்த புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து முருகன் மற்றும் அவரது கூட்டாளிகளை வலைவீசி தேடிவருகின்றனர்.