உள்ளூர் செய்திகள்
சிவப்பு ரேசன் அட்டை ரத்து அறிவிப்பை உடனே திரும்ப பெற வேண்டும்-முன்னாள் எம்.எல்.ஏ. அனந்தராமன் வலியுறுத்தல்
இலவச அரிசி பெறாத சிவப்பு ரேசன் அட்டை ரத்து அறிவிப்பை உடனே திரும்ப பெற வேண்டும் என முன்னாள் எம்.எல்.ஏ. அனந்தராமன் வலியுறுத்தி உள்ளார்.
புதுச்சேரி:
புதுவை மாநில காங்கிரஸ் துணை தலைவரும், முன்னாள் அரசு கொறடாவுமான அனந்தராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
புதுவை மாநிலத்தில் மத்திய அரசு திட்டத்தின் கீழ் 5 கிலோ இலவச அரிசியை ஒவ்வொரு சிவப்பு அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என்று குடிமைப்பொருள் இயக்குனர் ஒரு சுற்றறிக்கையை அனுப்பி இருந்தார்.
இந்த சுற்றறிக்கை மூலம் சிவப்பு அட்டை வைத்திருக்கக்கூடிய நபர்கள் வசிக்கக்கூடிய பகுதியில் உள்ள ரேஷன் கடையில் பெற்றுக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. அப்படி அவர்கள் பெறவில்லை என்றால் அவருடைய குடும்ப அட்டையை ரத்து செய்துவிடுவேன் என்று இயக்குனர் அறிவித்துள்ளார். இது கண்டனத்துக்குரியது இப்படிப்பட்ட செயலை குடிமைப்பொருள் இயக்குனரகம் மாற்றிக்கொள்ளவேண்டும்.
உடனடியாக சம்பந்தப்பட்ட அமைச்சர் இதில் தலையிட வேண்டும் இந்த நாடு மிகப்பெரிய ஜனநாயக நாடு. அவர்கள் தங்களுடைய தகுதிக்கு ஏற்ப வாழ்வதற்கும் தாங்கள் எதை விரும்பி உண்ண வேண்டும் என்று கூறுவதற்கும் சுதந்திரமாக முடிவு எடுப்பதற்கும் எல்லாவிதமான அதிகாரமும் அரசியல் சாசனம் ஒவ்வொரு குடிமகனுக்கும் கொடுத்திருக்கிறது.
அந்த வகையில் மிகப்பெரிய பொறுப்பில் இருக்க கூடிய ஒருவர் இப்படிப்பட்ட அறிவிப்பை தான்தோன்றித்தனமாக விடுவது மக்களை அடிமைப்படுத்த ஒரு செயலாக உள்ளது. உடனடியாக இந்த அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.