உள்ளூர் செய்திகள்
கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தைக்கு மாடுகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது.

கருங்கல்பாளையம் சந்தையில் 85 சதவீதம் மாடுகள் விற்பனை

Published On 2022-03-03 15:50 IST   |   Update On 2022-03-03 15:50:00 IST
வெளிமாநில வியாபாரிகள் வருகையால் கருங்கல்பாளையம் சந்தையில் 85 சதவீதம் மாடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
ஈரோடு:

வெளிமாநில வியாபாரிகள் வருகையால் கருங்கல்பாளையம் சந்தையில் 85 சதவீதம் மாடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

ஈரோடு கருங்கல் பாளையத்தில் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை மாட்டுச்சந்தை நடை பெறுவது வழக்கம். இந்த சந்தைக்கு கேரளா ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, கோவா, ராஜஸ்தான் போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக் கணக்கான வியாபாரிகள் வந்து மாடுகளை வாங்கி செல்வார்கள்.

கடந்த சில வாரமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால் வெளிமாநில வியாபாரிகள் குறைந்த அளவே வந்திருந்தனர். இதனால் வியாபாரம் சுமாராகவே இருந்து வந்தது. தற்போது தேர்தல் முடிந்து பழைய நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் கடந்த வாரம் கூடிய சந்தையில் வெளிமாநில வியாபாரிகள் அதிக அளவில் வந்திருந்தனர். இதனால் வியாபாரம் சூடு பிடித்தது. 

இதேபோல் இன்று கூடிய மாட்டுச்சந்தையில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, போன்ற வெளி மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்தனர்.

இன்று 450 பசுமாடுகள், 250 எருமை மாடுகள், 50 கன்றுகள் விற்பனைக்கு வந்திருந்தன. கடந்த வாரத்தை விட மாடுகள் வரத்து அதிகமாக வந்திருந்தது. 

இன்று 85 சதவீத மாடுகள் விற்பனை ஆனது. பசுமாடுகள் ரூ.30 ஆயிரம் முதல் 65 ஆயிரம்  வரைக்கும், எருமை மாடுகள் ரூ.25 ஆயிரம் முதல் 45 ஆயிரம் வரைக்கும், வளர்ப்பு கன்றுகள் ரூ.15 ஆயிரம் வரைக்கும் விற்பனையானது. 

Similar News