உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

பெரிய மாரியம்மன் வகையறா கோவில் குண்டம் தேர்த்திருவிழா

Published On 2022-03-03 15:37 IST   |   Update On 2022-03-03 15:37:00 IST
பெரிய மாரியம்மன் மற்றும் அதன் வகையறா கோவில்களான சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் ஆகிய கோவில்களில் திருவிழா சிறப்பாக நடத்தப்படும். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு காரணமாக திருவிழா எளிமையாக நடந்தது.
ஈரோடு:

ஈரோட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் குண்டம் தேர்த்திருவிழா  ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும்.

கம்பம் பிடுங்குதல் மற்றும் மஞ்சள் நீராட்டு விழாவின்போது ஈரோடு மாநகரம் விழாக்கோலம் பூண்டு காணப்படும். அன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் கம்பம் பிடுங்குதல், மஞ்சள் நீராட்டு விழாவில் கலந்து கொள்வார்கள். 

பெரிய மாரியம்மன் மற்றும் அதன் வகையறா கோவில்களான சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் ஆகிய கோவில்களில் திருவிழா சிறப்பாக நடத்தப்படும். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு காரணமாக திருவிழா எளிமையாக நடந்தது.

இந்த நிலையில் கொரோனா தொற்று பரவல் குறைந்து இருப்பதால் இந்த ஆண்டு திருவிழா விமரிசையாக நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பில் பக்தர்கள் உள்ளனர். 

இந்த ஆண்டுக்கான குண்டம் தேர்த்திருவிழா வருகிற 15-ந் தேதி இரவு 9 மணிக்கு பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது. இதில் மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்படுகிறது. 

அதன்பிறகு ஈரோடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்த ஆயிரக் கணக்கான பக்தர்கள் பெண்கள் தினமும் மாரியம்மனுக்கு புனித நீர் எடுத்து வந்து வழிபட்டு செல்வார்கள். 

இதனைத்தொடர்ந்து வருகிற 19-ந் தேதி இரவு 8.30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், இரவு 10 மணிக்கு கம்பம் நடும் விழாவும் நடைபெறுகிறது.

 23-ந் தேதி இரவு 10.30 மணிக்கு கிராம சாந்தி பூஜை நடக்கிறது. 24-ந் தேதி மாலை 5 மணிக்கு கோவிலில் கொடியேற்றப்படுகிறது.  29-ந் தேதி அதிகாலை 5.30 மணிக்கு காரை வாய்க்கால் மாரியம்மன் கோவிலில் குண்டம் விழா நடக்கிறது.

இதில் விரதம் கடைபிடிக்கும் பக்தர்கள் தீ மிதித்து வேண்டுதலை நிறை வேற்ற உள்ளனர். அன்று இரவு 8 மணிக்கு மாவிளக்கு பூஜை நடக்கிறது. 

30-ந் தேதி காலை 9.30 மணிக்கு பொங்கல் விழாவும், சின்ன மாரியம்மன் கோவிலில் தேரோட்டமும் நடைபெறுகிறது. 31-ந் தேதி இரவு 9.30 மணிக்கு மலர் பல்லக்கில் பெரிய மாரியம்மனின் வீதிஉலா நடக்கிறது.

வருகிற ஏப்ரல் மாதம் 1-ந் தேதி இரவு 8 மணிக்கு மலர் பல்லக்கில் காரை வாய்க்கால் மாரியம்மன் வீதி உலாவும், இரவு 9.30 மணிக்கு மலர் பல்லக்கில் சின்ன மாரியம்மன் வீதி உலாவும் நடைபெற உள்ளன. 

விழாவின் முக்கிய நிகழ்வான கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சி மற்றும் மஞ்சள் நீராட்டு விழா  2-ந் தேதி மதியம் 3 மணிக்கு நடைபெறுகிறது. 

அப்போது பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் ஆகிய கோவில்களில் நடப்பட்டு இருந்த கம்பங்கள் பிடுங்கப்பட்டு ஈரோடு மாநகராட்சியின் முக்கிய பகுதிகளில் ஊர்வலமாக கொண்டு செல்லப் பட்டு காவிரி ஆற்றில் விடப்படுகிறது. 

விழாவில் பக்தர்கள் ஒருவர் மீது ஒருவர் மஞ்சள் நீரை ஊற்றி மகிழ்வார்கள். 3-ந் தேதி காலை 10.30 மணிக்கு நடக்கும் மறு பூஜையுடன் விழா நிறைவடைகிறது.

Similar News