உள்ளூர் செய்திகள்
மத்திய நிதி அமைச்சருடன் நமச்சிவாயம் சந்திப்பு
நிதிக்குழுவில் புதுவையை இணைக்க வேண்டும் என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீத்தாராமனிடம் அமைச்சர் நமச்சிவாயம் வலியுறுத்தியுள்ளார்.
புதுச்சேரி:
புதுவை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் விமானம் மூலம் டெல்லி சென்றார்.
அங்கு 11 மணிக்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீத்தாராமனை அவரது அலுவலகத்தில் அமைச்சர் நமச்சிவாயம் சந்தித்தார். அப்போது மாநிலம், யூனியன் பிரதேசங்களின் நிதிக்குழுவில் புதுவை சேர்க்கப்படாததால் மத்திய அரசின் மானியம், நிதி உதவி கிடைக்கவில்லை. இதனால் மாநிலத்தில் நலத்திட்டங்களை செயல் படுத்த முடியவில்லை.
எனவே நிதிக்குழுவில் புதுவையை சேர்க்க வேண்டும். கடந்த காலத்தை போல புதுவைக்கு 90 சதவீத மானியத்தை மத்திய அரசு வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
அதோடு புதுவைக்கு சிறப்பு நிதியாக ரூ.2 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து டெல்லியில் முகாமிட்டுள்ள அமைச்சர் நமச்சிவாயம், மத்திய சுகாதாரத்துறை மந்திரி, உள்துறை செயலரை ஆகியோரையும் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.