உள்ளூர் செய்திகள்
4 வழி சாலைக்காக கடைகள்-மரங்கள் அகற்றம்
4 வழி சாலைக்காக கடைகள்-மரங்கள் அகற்றதால் திருபுவனையில் நீர் ஆதாரம் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரி :
திருபுவனையில் 4 வழி சாலைக்காக பணிகள் நடைபெற்று வரும் நிலையில் மேம்பாலம் அமைக்கும் பணி இரவு பகலாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் திருபுவனை பகுதியில் இருந்த மிகவும் பழமையான மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றது.
மேலும் 4 வழிசாலை பணிக்காக திருபுவனை பகுதியில் கடந்த 30 ஆண்டு காலமாக சாலையோரம் நடத்தி வந்த 20-க்கும் மேற்பட்ட நடைபாதை கடைகள் அகற்றப்பட்டது.
சாலையோரம் வைக்கப்பட்டிருந்த கடைகள் அகற்றப்பட்டதால் வியாபாரிகள் தங்களுக்கு வேறு வாழ்வாதாரம் இல்லை எனக் கூறி தற்போது கடைகளை வைப்பதற்கு இடம் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
திருபுவனையில் உள்ள மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து வணிக வளாகம் அருகில் சிறு குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் உழவர்சந்தை நடைபெற்று வருகின்றது.
தற்போது சாலை அகலப்படுத்தும் பணிக்காக அங்கு மாலைநேர கடைகளை வைக்க முடியாமல் 30-க்கும் மேற்பட்ட சிறு குறு விவசாயிகள் பாதிப் படைந்துள்ளனர்.
தாங்கள் விளைவிக்கும் காய்கறிகள், கீரைகள், பழவகைகளை விற்பனை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த மாலை நேர உழவர் சந்தையில் பொதுமக்கள் அதிக அளவில் கூடி தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தற்போது திருபுவனையில் உள்ள 500-க்கும் மேற்பட்ட பனைமரங்களை வெட்டி சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. இதனால் திருபுவனையில் நீர் ஆதாரம் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.