உள்ளூர் செய்திகள்
போலியோ சொட்டு மருந்து விழிப்புணர்வு ஊர்வலத்தை சுகாதாரத்துறை செயலாளர் தொடங்கி வைத்தார்.

86 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து- 453 மையங்களில் நாளை கொடுக்கப்படுகிறது

Published On 2022-02-26 08:25 IST   |   Update On 2022-02-26 08:25:00 IST
புதுவையில் 5 வயதுக்குட்பட்ட 86 ஆயிரம் குழந்தைகளுக்கு நாளை போலியோ சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
புதுச்சேரி:

போலியோவை (இளம்பிள்ளை வாதம்) ஒழிப்பதற்காக இந்தியாவில் ஆண்டு தோறும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 2 தவணைகளில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வந்தது. கடந்த 3 ஆண்டுகளாக ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் போலியோ சொட்டு மருந்து இந்தியாவில் வழங்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் தொற்று பரவல், ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த ஜனவரி 23-ந் தேதி நடைபெற இருந்த போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், நாளை (ஞாயிற்றுக்கிழமை) புதுச்சேரியில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. இது குறித்து புதுவை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி புதுவையில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட உள்ளது. இதற்காக போலியோ சொட்டு மருந்து முகாம் நாளை நடக்கிறது. அதன்படி புதுவை மாநிலத்தில் அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு கூடங்கள், பள்ளிகள் என 453 மையங்களில் 876 குழுக்களை கொண்டு 86 ஆயிரத்து 801 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து அளிக்கப்பட உள்ளது.

முகாமினை முன்னிட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரி, இந்திராகாந்தி மருத்துவக்கல்லூரி, ராஜீவ்காந்தி அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை ஆகிய இடங்களில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது.

மக்கள் அதிகம் கூடும் மற்றும் கடந்து செல்லும் இடங்களான பஸ்நிலையம், ரெயில் நிலையம், கடற்கரை சாலை, மணக்குள விநாயகர் கோவில், தாவரவியல் பூங்கா, ஊசுட்டேரி, சுண்ணாம்பாறு படகு குழாம், போகோ லேண்ட், போத்தீஸ் ஆகிய இடங்களிலும் சொட்டு மருந்து கொடுக்கப்பட உள்ளது.

புதுச்சேரி - தமிழக எல்லைகளான காலாப்பட்டு, மதகடிப்பட்டு, கோரிமேடு, கன்னியக்கோவில், திருக்கனூர், குருமாம்பட்டு ஆகிய இடங்களில் முகாம் அமைத்து போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்படுகிறது. நடமாடும் போலியோ வாகனம் மூலமாகவும் புதுச்சேரி பகுதியிலும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.

இந்த வருடம் அதிக இடம்பெயரும் மக்களையும் இனம் கண்டு அவர்களுக்கு முழுமையாக போலியோ சொட்டு மருந்து சென்றடையை வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் போலியோ சொட்டு மருந்து குறித்து சுகாதாரத்துறை சார்பில் நேற்று விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. சுகாதாரத்துறை அலுவலகம் முன்பு நடந்த நிகழ்ச்சியில் துறை செயலாளர் உதயகுமார் கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். நகரின் முக்கிய வீதிகள் வழியாக செவிலியர் கல்லூரி மாணவிகள் ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு, துணை இயக்குனர் முரளி, ஆனந்தலட்சுமி, ராஜாம்பாள், ரகுநாதன், மணக்குள விநாயகர் செவிலியர் கல்லூரி மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Similar News