உள்ளூர் செய்திகள்
பெண்கள் பெயரிலான சொத்துக்கு வங்கிகளில் அடமான கடன் மறுப்பு-தி.மு.க. புகார்
பெண்கள் பெயரிலான சொத்துக்கு வங்கிகளில் அடமான கடன் மறுப்பு குறித்து தி.மு.க. புகார் அளித்துள்ளது.
புதுச்சேரி:-
புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வங்கிகளில் பெண்கள் பெயரில் பதிவு செய்யப்பட்ட சொத்துக்களை அடமானம் வைத்து, தொழில் தொடங்கவோ, வீட்டு மனைகளை அடமானம் வைத்து அதில் வீடு உள்ளிட்ட கட்டிடங்கள் கட்டுவதற்கோ அல்லது வேறு சில குடும்ப தேவைகளுக்காகவோ கடன் கேட்டால் தர மறுக்கின்றனர்.
முழு முத்திரைத்தாள் கட்டணத்தையும் செலுத்தி விட்டு சொத்து பத்திரங்களை எடுத்து வந்தால்தான் அடமானம் ஏற்றுக்கொண்டு, அந்த சொத்தின் மீது கடன் தருவோம் என்று கூறி திருப்பி அனுப்புகின்றனர்.
இது பெண்கள் பெயரில் சொத்துக்களை பதிவு செய்யும் நோக்கில் அரசு கொண்டுவந்துள்ள 50 சதவீத முத்திரைத்தாள் கட்டண தள்ளுபடி திட்டத்திற்கே எதிரானது. எனவே அரசு முத்திரை தாள் கட்டணத்தில் 50 சதவீத தள்ளுபடியில் பெண்கள் பெயரில் பதிவு செய்துள்ள சொத்துக்களை வங்கிகளில் அடமானம் வைத்து கடன் உள்ளிட்டவைகளை வங்கிகள் தடையின்றி வழங்க வேண்டும் என்று வங்கிகளுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்ப வேண்டும். அல்லது வங்கி அதிகாரிகள் கூட்டத்தை கூட்டி வலியுறுத்த வேண்டும்.
இவ்வாறு சிவா எம்.எல்.ஏ அறிக்கையில் கூறியுள்ளார்.