உள்ளூர் செய்திகள்
மீனவர்களை மீட்க கோரி முதலமைச்சர் ரங்கசாமி காலில் விழுந்து கதறிய குடும்பத்தினர்.

மீனவர்களை மீட்க கோரி ரங்கசாமி காலில் விழுந்து கதறிய குடும்பத்தினர்

Published On 2022-02-25 10:34 IST   |   Update On 2022-02-25 10:34:00 IST
கோடியக்கரைக்கு தென் கிழக்கே இந்திய எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது, இலங்கை கடற்படையினர், படகுடன் 13 மீனவர்களையும் சிறைபிடித்தனர்.
புதுச்சேரி:

புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரிமேடு மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் வீரமணி.

இவருக்கு சொந்தமான விசைப்படகில், காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து, கடந்த 23-ந் தேதி 13 மீனவர்கள் மீன்பிடி தொழிலுக்கு சென்றனர்.

கோடியக்கரைக்கு தென் கிழக்கே இந்திய எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது, இலங்கை கடற்படையினர், படகுடன் 13 மீனவர்களையும் சிறைபிடித்தனர்.

கோட்டுச்சேரிமேடு மீனவ கிராமத்தை சேர்ந்த செல்வமணி, ரமேஷ், திலீபன், சுரேஷ் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த நவீன் குமார், பால்மணி, கவியரசன், நாகை மாவட்டத்தை சேர்ந்த சத்தியநாதன், நிலவரசன், ஆறுமுகசாமி, கிஷோர் மற்றும் கோகுல் ஆகிய 13 பேர் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 13 மீனவர்கள் மற்றும் அவர்களது விசைப்படகையும் மீட்டு தரக்கோரி, காரைக்காலில் இருந்து மீனவர்கள் குடும்பங்களைச் சேர்ந்த சின்னத்தம்பி, சாந்தி உள்ளிட்ட மீனவர்கள் புதுவைக்கு வந்து, முதல்- அமைச்சர் ரங்கசாமியை திலாஸ்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து காலில் விழுந்து கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தனர்.

மத்திய அரசிடம் தெரிவித்து, மீட்டுத் தருவதற்கு நடவடிக்கை எடுப்பதாக முதல்-அமைச்சர் ரங்கசாமி உறுதியளித்தார்.

Similar News