உள்ளூர் செய்திகள்
காரைக்காலில் பொதுமக்களுக்கு சொத்து அடையாள அட்டை வழங்குது குறித்து ஆலோசனைக்கூட்டம்
காரைக்காலில் ட்ரோன் மூலம் நில அளவு விவரத்தை சேகரித்து, பொதுமக்களுக்கு சொத்து அடையாள அட்டை வழங்குது குறித்த திட்டப்பணிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
காரைக்கால்:
காரைக்காலில் ட்ரோன் மூலம் நில அளவு விவரத்தை சேகரித்து, பொதுமக்களுக்கு சொத்து அடையாள அட்டை வழங்குது குறித்த திட்டப்பணிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. மத்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் ‘ஸ்வாமித்வா’ என்ற திட்டத்தை அமல்படுத்திவருகிறது.
ஆதிதிராவிட மக்கள் வாழும் பகுதிகள், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள எல்.ஜி.ஆர். மனைப்பட்டா பெற்று வீடு கட்டிக்கொண்டு வாழ்வோர் பகுதிகள், அங்கீகரிக்கப்படாத பகுதிகளில் வாழ்வோர் வீடுகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும் வகையில் ட்ரோன் மூலம் நில அளவீடு செய்து சொத்து அட்டை வழங்கப்படுகிறது. இந்த அட்டை வைத்திருப்போர் வங்கியில் கட்டுமானம் தொடர்பாக கடன் வசதி பெறுவது உள்ளிட்ட வசதிகளை பெறமுடியும். காரைக்கால் காமராஜர் அரசு வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக்குட்டத்திற்கு, புதுச்சேரி போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திரபிரியங்கா தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் அர்ஜூன் சர்மா, துணை கலெக்டர் ஆதர்ஷ் மற்றும் பல்வேறு அரசுத் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், நில அளவை பதிவேடுகள் துறை இயக்குனர் ரமேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டு திட்டம் குறித்து விளக்கி கூறினர். கூட்டத்தில், அமைச்சர் சந்திரபிரியங்கா பேசுகையில், காரைக்காலில் எல்.ஜி.ஆர். மனைப்பட்டா பெற்று வீடு கட்டிக்கொண்டுள்ளோர் பகுதிகள், ஆதிதிராவிட மக்கள் வாழும் பகுதிகளில், ட்ரோன் மூலம் அளவீடு செய்யும் பணியை விரைவாக எடுக்குமாறும், திட்டத்தின் மூலம். சொத்து அட்டையை பயனாளிக்கு கிடைக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் துரிதப்படுத்த அதிகாரிகள் முன்வரவேண்டும். என்றார்.