உள்ளூர் செய்திகள்
பா.ஜனதா அமைச்சர் போல் சபாநாயகர் செயல்படுகிறார்-தி.மு.க. கண்டனம்
பா.ஜனதா அமைச்சர் போல் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் செயல்படுகிறார் என்று தி.மு.க. குற்றம் சாட்டியுள்ளது.
புதுச்சேரி:
புதுவை சட்டசபையின் குளிர்கால கூட்டம் நடந்தது.
சட்டசபையில் மக்கள் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க அனுமதியளிக்காததை கண்டித்து தி.மு.க.-காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர். வெளிநட்பு குறித்து எதிர்கட்சித்தலைவர் சிவா கூறியதாவது:-
என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜனதா கூட்டணி ஆட்சி அமைந்து 8 மாதங்கள் ஆகிறது. இதுவரை அறிவித்த எந்த திட்டத்தையும் அரசு செயல்படுத்தவில்லை. பொதுப்பணித்துறை ஊழியர்களுக்கு ரூ.10 ஆயிரம் சம்பளம் அறிவிக்கப்பட்டது. இதுவரை வழங்கப்படவில்லை.
பொங்கல், தீபாவளிக்கு அறிவிக்கப்பட்ட பொருட்கள் இதுவரை வழங்கவில்லை. கூட்டுறவு சர்க்கரை ஆலை மூடப்பட்டு கிடக்கிறது. பஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. இதற்கு எந்த ஒரு தீர்வும் காணப்படவில்லை.
பா.ஜனதா, என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் மாநில அந்தஸ்து கிடைத்து விடும் என்றார்கள். இதுவரை என்ன நிலையில் உள்ளது? என தெரியவில்லை.
மின்துறையை தனியார் மயமாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதையெல்லாம் கேள்வி எழுப்பியதற்கு பேரவையில் முதல்-அமைச்சர் எந்த பதிலும் அளிக்கவில்லை. இதை கண்டித்து வெளி
ந டப்பு செய்தோம்.
அரசு அறிவித்த திட்டங்களை செயல்படுத்தாததை கண்டித்து படிப்படியாக போராட்டங்களை நடத்துவோம். சபாநாயகர் தனது பொறுப்பை மறந்துவிட்டு, பா.ஜனதா உறுப்பினராகவும், அமைச்சராகவும் செயல்படுகிறார். இது கண்டனத்துக்குரியது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.