திருமால்பூரில் ரெயில் தண்டவாளத்தில் வாலிபர் எரித்துக் கொலை
செங்கல்பட்டு:
திருமால்பூர் ரெயில் நிலையம் அருகே உள்ள யார்டுக்கு செல்லும் தண்டவாளத்தில் இன்று காலை ஆண் ஒருவர் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார்.
இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவ்வழியாக சென்றவர்கள் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தாம்பரம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் வைரவன், செங்கல்பட்டு ரெயில்வே சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் விரைந்து வந்து பிணமாக கிடந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பிணமாக கிடந்தவருக்கு சுமார் 40 வயது இருக்கும். அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவில்லை.
உடல் முழுவதும் எரிந்த நிலையில் காணப்படுவதால் அவரை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மர்ம நபர்கள் அவரை கடத்தி வந்து கொலை செய்து உடலை தண்டவாளத்தில் வைத்து எரித்து இருப்பது தெரியவந்தது. போலீசாரின் விசாரணையை திசை திருப்புவதற்காக கொலைக்கும்பல் உடலை தண்டவாளத்தில் வீசி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
கொலையுண்டவரை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள். இதையடுத்து அரக்கோணம், திருமால்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மாயமானவர்களின் விவரத்தை சேகரித்து வருகிறார்கள்.
கொலையுண்டவரின் விவரம் தெரிந்த பின்னரே கொலையாளிகள் பற்றி தெரியவரும். ரெயில்வே தண்டவாளத்தில் வாலிபர் எரித்து கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.