உள்ளூர் செய்திகள்
ஜெயங்கொண்டம் பாத்திமா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களை கலெக்டர் ரமண சரஸ்வதி நேரில் பார

வாக்கு எண்ணும் மையங்களில் கலெக்டர் ஆய்வு

Published On 2022-02-20 14:20 IST   |   Update On 2022-02-20 14:20:00 IST
வாக்கு எண்ணும் மையங்களில் அரியலூர் கலெக்டர் திடீரென ஆய்வு செய்தார்
அரியலூர்:

அரியலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று 19-ந்தேதி  நடைபெற்றது. உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த காவல்துறை பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. 

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள அரியலூர் நகராட்சி அலுவலகத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையம், ஜெயங்கொண்டம் பாத்திமா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ள ஜெயங்கொண்டம் நகராட்சி, உடையார்பாளைம் பேரூராட்சி மற்றும் வரதராஜன்பேட்டை பேரூராட்சிகளின் வாக்கு எண்ணும் மையங்களை மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


இந்த வாக்கு எண்ணும் மையங்களில் கண்காணிப்பு கேமரா வசதி மற்றும் கண்காணிப்பு அறை, வாக்கு எண்ணும் மையத்தில் வார்டு வாரியாக வாக்குகள் எண்ணும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மேசை, நாற்காலிகள், வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் அமரும் இடம், 

சுற்றுகளின் எண்ணிக்கை, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அமரும் இடம், முடிவு அறிவித்தல் மற்றும் வெற்றிச்சான்றிதழ் வழங்கும் இடம், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக கொண்டு வரும் வழி, ஒவ்வொரு வார்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் வெளியேறும் வழி, காவல் துறை பாதுகாப்பு வசதிகள், அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து மாவட்ட  கலெக்டர் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்டறிந்து ஆய்வு செய்தார். 

இந்த ஆய்வின்போது, வாக்கு எண்ணிக்கை நாளான 22-ந்தேதி தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பின்படி, உரிய விதிமுறைகளுக்குட்பட்டு, வாக்கு எண்ணிக்கையின்போது சிறப்பாக பணியாற்ற வேண்டும் என அலுவலர்களுக்கு கலெக்டர் ரமண சரஸ்வதி அறிவுறுத்தினார்.

Similar News