உள்ளூர் செய்திகள்
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் அருகே சென்டர் மீடியனில் ஸ்கூட்டர் மோதி சென்னை வாலிபர் பலியானார்.
காவேரிப்பட்டணம்:
தருமபுரி- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் காவேரிப்பட்டணம் அருகே ஏர்ரள்ளி அருகே 2 வாலிபர்கள் ஸ்கூட்டரில் இன்று காலை 8 மணியளவில் வந்தனர். அப்போது சென்டர் மீடியனில் ஸ்கூட்டர் மோதியது இதில் சம்பவ இடத்திலேயே ஸ்கூட்டரை ஓட்டி வந்த வாலிபர் பலியானார். பின்னால் அமர்ந்திருந்த வாலிபர் படுகாயம் அடைந்தார்.
இதையடுத்து அங்கிருந்தவர்கள் இதுபற்றி காவேரிப்பட்டணம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரித்தனர். அப்போது விபத்தில் பலியானவர் சென்னை திருவொற்றியூரை சேர்ந்த ஹரி என்கிற தமிழன் என்று தெரிய வந்தது. மேலும் படுகாயம் அடைந்தவர் சென்னை பெரம்பூரை சேர்ந்த யுவராஜ் (22) என்றும் தெரிய வந்தது. இதையடுத்து காயம் அடைந்த யுவராஜை மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து பற்றி காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.