உள்ளூர் செய்திகள்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆர்வமுடன் வாக்களித்த பொதுமக்கள்
கிருஷ்ணகிரி நகராட்சி மற்றும் ஓசூர் மாநகராட்சி, 6 பேரூராட்சிகளில் பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து இன்று ஓட்டுபோட்டனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி நகராட்சி மற்றும் பேரூராட்சிகளான ஊத்தங்கரை, காவேரிப்பட்டினம். நாகோஜனஅள்ளி, கெல மங்கலம் தேன்கனிக்கோட்டை மருதூர் ஆகிய 6 பேரூராட்சிகளுக்கு இன்று (சனிக்கிழமை) வாக்குப்பதிவு நடைபெற்றது.
கிருஷ்ணகிரி நகராட்சி உள்ள 33 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் இன்று தேர்தல் நடந்தது. காலை 7 மணி முதலே வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். வாக்குச் சாவடி மையங்களில் வாக்காளர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்ப பரிசோதனை செய்து முகக் கவசம் வழங்கி அனுப்பப்பட்டனர்.
மேலும் வயதானவர்கள் வீல்சேர் மூலம் வாக்குச் சாவடிகளுக்கு அழைத்து சென்று ஓட்டு போட வைத்தனர்.
கிருஷ்ணகிரி நகராட்சியில் மொத்தம் 66 வாக்குச் சாசாவடிகளில் 8 இடங்களில் 12 வாக்குச்சாவடிகள் பதட்ட மானவையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு நகராட்சி சார்பில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டு இருந்தது.
ஓசூர் மாநகராட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. மொத்தம் 57 இடங்களில் 248 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. காலையில் பனிப்பொழிவும், குளிரும் இருந்ததால் 8 மணிக்கு பிறகுதான் வாக்காளர்கள் ஆர்வத்துடன் ஓட்டுபோட சென்றனர். நேரம் செல்லச்செல்ல வாக்குச் சாவடிகள் கூட்டம் அதிகரித்தது. மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். ஓசூர் மாநகராட்சி தேர்தல் வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடந்தது.
இதேபோல் ஊத்தங்கரை, காவேரிப்பட்டினம். நாகோஜனஅள்ளி, கெல மங்கலம் தேன்கனிக்கோட்டை மருதூர் ஆகிய 6 பேரூராட்சிகளிலும் வாக்குப்பதிவு நடந்தது.
கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மாவட்டம் முழுவதும் நடைபெறும் உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு ஏற்பாடுகளை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.