உள்ளூர் செய்திகள்
மாசி மகம் திருவிழாவிற்காக மாமல்லபுரம் கடற்கரையில் இருளர்கள் குவிந்தனர்

மாசி மகம் திருவிழா- மாமல்லபுரம் கடற்கரையில் இருளர்கள் குடும்பத்துடன் குவிந்தனர்

Published On 2022-02-16 15:57 IST   |   Update On 2022-02-16 15:57:00 IST
ஆயிரக்கணக்கான இருளர்கள் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா போன்ற வெவ்வேறு மாநிலங்களில் இருந்தும் குடும்பம் குடும்பமாக மாமல்லபுரத்திற்கு வந்தனர்.
மாமல்லபுரம்:

மாமல்லபுரத்தில் இருளர்களின் பாரம்பரிய “மாசிமகம்“ திருவிழா இன்று காலை தொடங்கியது.

இதற்காக நேற்று இரவே ஆயிரக்கணக்கான இருளர்கள் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா போன்ற வெவ்வேறு மாநிலங்களில் இருந்தும் குடும்பம் குடும்பமாக மாமல்லபுரத்திற்கு வந்தனர்.

பின்னர் கடற்கரை ஓரத்தில் சேலைகளால் குடில்கள் அமைத்து அங்கு தங்கினர்.

இன்று அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்னர் அவர்களது குலதெய்வமான பச்சையம்மன், கன்னியம்மனை கடற்கரை பிடி மண்ணில் செய்து, படையலிட்டு அரிசி மாவில் விளக்கு செய்து, அதில் தீபமேற்றி வழிபட்டனர்.

பின்னர் குழந்தைகளுக்கு மொட்டை போடுவது, சாமி ஆடுவது, திருமணம் நிச்சயிப்பது, திருமணம் நடத்துவது, குறி சொல்லுவது, குறி கேட்பது போன்ற அவர்களது பாரம்பரிய வழிபாட்டு முறைகளை செய்தனர். 25க்கும் மேற்பட்ட திருமணங்களும் நடந்தது.

பின்னர் அப்பகுதிகளில் உள்ள ஏரி, கம்மாய், குளம், குட்டை பகுதிகளுக்கு சென்று மீன் வேட்டையாடியும், மாமல்லபுரம் மார்க்கெட்டில் கறி, மீன் வாங்கியும் திறந்த வெளியில் சமைத்து குடும்பம், குடும்பமாக குடில்களில் அமர்ந்து விருந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

இவர்களின் போக்குவரத்து வசதிக்காக செங்கல்பட்டில் இருந்து சிறப்பு அரசு பேருந்துகள் இன்றும் நாளையும் இயக்கப்படுகிறது.

இரவு பகலாக போலீசார் கடற்கரை அருகாமையில் உள்ள திருவள்ளுவர் சிலை அருகே உயரமான பகுதியில் நின்று கூட்டத்தை கண்காணித்து வருகிறார்கள்.

இவர்களின் மாசிமகம் திருவிழா வருகையால் உள்ளூர் பாத்திரம், விறகு, மளிகை, உணவு, காய்கறி, சாலையோர கடைகள் என அனைத்து வியாபாரமும் களைகட்டுகிறது.

Similar News