உள்ளூர் செய்திகள்
அரியலூரில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை நகராட்சி ஆணையரிடம் தேர்தல் பறக்கும் படை அலுவலர் கணேசன் ஒப்படைத்த காட்சி

அரியலூர் மாவட்டத்தில் உரிய ஆவணமின்றி எடுத்துச்செல்லப்பட்ட பணம் பறிமுதல்

Published On 2022-02-05 15:24 IST   |   Update On 2022-02-05 15:24:00 IST
அரியலூர், ஜெயங்கொண்டத்தில் உரிய ஆவணமின்றி எடுத்து சென்ற பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
அரியலூர்:

அரியலூர், ஜெயங்கொண்டம், உடையார்பாளையம், வரதராசன்பேட்டை ஆகிய பகுதிகளில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெறுவதையொட்டி, தேர்தல் பறக்கும் படையினர் மேற்கண்ட பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில்,  அரியலூர் நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பு தேர்தல் பறக்கும் படை அலுவலர் கணேசன் தலைமையில், காவல் துறையைச் சேர்ந்த ஸ்டீபன் ராஜ், அந்தோணிராஜ் ஆகியோர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக தவுத்தாய்குளத்தில் இருந்து அரியலூர் நோக்கி வந்த இருசக்கர வாகனத்தை மறித்து சோதனையிட்டனர்.

அப்போது வானத்தினுள் ரூ.1 லட்சத்து 26 ஆயிரத்து 700 இருந்தது தெரியவந்தது.  இதுகுறித்து அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் அவர், கீழகொளத்தூரை சேர்ந்த தங்கராஜ் மகன் தேவேந்திரன் என்பது தெரிந்தது.

அவர், தவுத்தாய்குளத்திலுள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் வேலை செய்து வருவதும், பங்கில் வசூலான மேற்கண்ட தொகையை அரியலூர் பாரத ஸ்டேட் வங்கியில்  செலுத்த  வந்ததும் தெரியவந்தது.

எனினும் அவர் உரிய ஆவணங்களின்றி பணத்தை எடுத்து வந்துள்ளதால் அவரிடமிருந்து மேற்கண்ட தொகையை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதனை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

Similar News