உள்ளூர் செய்திகள்
பா.ஜனதா கூட்டணியை மறுபரிசீலனை செய்யுங்கள்-ரங்கசாமிக்கு தி.மு.க. ஆலோசனை
மத்திய பட்ஜெட்டில் புதுவை புறக்கணிப்பால் பா.ஜனதா கூட்டணியை மறுபரிசீலனை செய்யுங்கள் என ரங்கசாமிக்கு தி.மு.க. மறுபரிசீலனை செய்யவேண்டும்.
புதுச்சேரி:
காரைக்கால் மாவட்ட தி.மு.க. அமைப்பாளர் நாஜிம் நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய பட்ஜெட்டில் தமிழகம், புதுவை முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் திருத்திய மதிப் பீட்டுக்கு மத்திய அரசு ரூ.150 கோடி மட்டுமே கூடுதலாக ஒதுக்கியுள்ளது. 6-வது சம்பள கமிஷன் அமல்படுத்தியபோது இழப்பீடு வழங்கியது. 7-வது சம்பள கமிஷன் அமல்படுத்தியதற்கு எந்த நிதியும் வழங்கவில்லை.
மழை சேதத்தை மத்தியக்குழு பார்வையிட்டு நிவாரணம் வழங்க வேண்டும் என புதுவை அரசு கோரியிருந்தது. இதைப்பற்றி எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.
ஏற்கனவே பல துறை சார்ந்த ஊழியர்கள் சம்பளம் இல்லாமல் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் அங்கன் வாடி ஊழியர்கள் போராட்டத்தையும் தொடங்கியுள்ளனர். ஆட்சி மாறினாலும், காட்சி எதுவும் மாறவில்லை. சிறிய பணிகள்கூட நடைபெறவில்லை. இதனால் புதுவை மக்கள் நம்பிக்கையிழந்து வருகின்றனர்.
கூட்டணியில் இருந்தாலும் புதுவைக்கென மத்திய அரசு எதையும் வழங்க தயாராக இல்லை. எனவே பா.ஜனதா கூட்டணியை முதல்-அமைச்சர் ரங்கசாமி மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.