உள்ளூர் செய்திகள்
கவர்னருடன் தி.மு.க- காங். கூட்டணி கட்சியினர் சந்திப்பு
மின்துறை ஊழியர்கள் போராட்டம் தொடர்பாக கவர்னர் தமிழிசையுடன் தி.மு.க-காங். கூட்டணி கட்சியினர் சந்தித்தனர்.
புதுச்சேரி :
புதுவை கவர்னர் தமிழிசையை தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி கட்சி தலைவர்கள் கவர்னர் மாளிகையில் சந்தித்தனர்.
மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி. சுப்ர மணியன் தலைமையில், தி.மு.க. அவைத்தலைவர் எஸ்.பி.சிவக்குமார், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம், மார்க்சிஸ்டு செயலாளர் ராஜாங்கம், விடுதலை சிறுத்தைகள் முதன்மை செயலாளர் தேவ.பொழிலன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் சந்தித்து மனு அளித்தனர்.
பின்னர் தி.மு.க. அவைத்தலைவர் எஸ்பி.சிவக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
மின்துறையை தனியார் மயமாக்குவதால் சாதாரண மனிதர்களுக்குக்கூட பாதிப்பு ஏற்படும். போராட்டத்தில் ஈடுபடும் மின் ஊழியர்கள் மீது எஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படலாம்.
ஏனெனில் அத்தியாவசிய சேவைகளில் குடிநீர், காற்று ஆகியவற்றோடு மின்சாரமும் அடங்கியுள்ளது. அத்தியாவசிய தேவையான மின்சாரத்தை தனியாரிடம் வழங்குவது நியாயம்தானா? என கவர்னரிடம் கேள்வி எழுப்பினோம்.
பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதையும் கவர்னரிடம் விளக்கினோம். கவர்னர், தனக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி ஜனாதிபதி, பிரதமர், மத்திய மந்திரி நிர்மலா சீத்தாராமனிடம் பேசி, மின்துறை தனியார் மயத்தை தவிர்க்க வேண்டும் என கேட்டுக் கொண்டோம்.
கவர்னர் எங்களிடம் பேசியதிலிருந்து, மின்துறை தனியார் மயத்தை தடுக்க நடவடிக்கை எடுப்பார் என உறுதியாக நம்புகிறோம். தனிநபர் பயனடைய ஜனநாயகத்தை குழிதோண்டி புதைப்பது சரியானதல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம் நிருபர்களிடம் கூறும் போது, மின்துறையை தனியார்மயமாக்குவதை எதிர்க்கட்சிகள் ஒருங் கிணைந்து எதிர்க்கிறோம்.
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஊழியர்களுக்கு காங்கிரஸ், தி.மு.க., கம்யூனிஸ்டு உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஆதரவு அளிக்கிறோம். அவர்களுக்கு ஆதரவாக இன்று (பிப்ரவரி1) மாலை ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். தனியார்மயத்தை கைவிடும்வரை எங்களின் போராட்டம் தொடரும் என்று கூறினார்.