உள்ளூர் செய்திகள்
கென்னடி எம்.எல்.ஏ. தலைமையில் மீனவர்கள் நல்லுறவு கூட்டம் நடைபெற்ற காட்சி.

மீனவர்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும்-கென்னடி எம்.எல்.ஏ. உறுதி

Published On 2022-02-01 10:37 IST   |   Update On 2022-02-01 10:37:00 IST
மீனவர்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என்று கென்னடி எம்.எல்.ஏ. உறுதியளித்தார்.
புதுச்சேரி:

புதுவை உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட வம்பாக்கீரப்பாளையம்  பொதுமக்கள் பாண்டி மெரீனாவை தடை செய்யக் கோரி மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்த தகவல் கிடைத்ததும் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. மற்றும் ஒதியஞ்சாலை போலீசார் விரைந்து சென்று பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.

இதனை தொடர்ந்து மீனவர்கள் நல்லுறவு கூட்டம் நடைபெற்றது. ஒதியஞ்சாலை இன்ஸ்பெக்டர் மனோஜ், சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன், பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் ஏழுமலை மற்றும் நகராட்சி அதிகாரிக்ள கலந்து கொண்டனர்.
கூட்டத்துக்கு தலைமை தாங்கி கென்னடி எம்.எல்.ஏ. பேசியதாவது:-

மீனவர்களின் வாழ் வாதாரம் காக்கப்படும்.  வரும் காலங்களில் அப் பகுதியில் உள்ள கடைகளை மீனவ மக்களுக்கு டெண்டர் பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும். அரசால் கொண்டு வரப்படும் திட்டங்கள் மீனவர்களுக்கு சரியான முறையில் கொண்டு சேர்க்கப்படும்.

மெரீனா பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் அந்த பகுதியில் போலீஸ் பூத் விரைவில் அமைக்க வேண்டும். என்று இன்ஸ்பெக்டரிடம் வலியுறுத்தினார்.

மீனவ சமுதாய மக்கள் சுற்றுலா பயணிகளுக்கும், நகராட்சி அதிகாரிகளுக்கும் இடையூறு ஏற்படாத வண்ணம் அப்பகுதியில் முறையான உரிமம் பெற்று கடைகளை அமைத்து கொள்ளலாம் என கென்னடி எம்.எல்.ஏ. உறுதியளித்தார்.

மீன் வளத்துறை அமைச்சர் மற்றும் மீனவர் நலத்துறை இயக்குனர் ஆகியோரிடம் நேரில் சென்று மீனவர்கள் தொழில் செய்ய ஏதுவாக வலை கூடம், தண்ணீர், மின்சாரம் போன்ற வசதிகளுக்காக நடவடிக்கை எடுத்து அதன் நிலைமையை பொதுமக்களிடம் தெரிவித்தார்.

கூட்டத்தில் பஞ்சாயத்து தலைவர் தனசேகரன்,மீனவர் பஞ்சாயத்து துணை தலைவர் ஜலேந்திரன் மற்றும் கோபி, செயலாளர் கார்த்தி, துணை செயலாளர் வீரமணி, பொருளாளர்ஜயமணி, துணை பொருளாளர் ஜெயராமன், உறுப்பினர்கள் விஜய், ராஜ் குமார், தினேஷ், மதிவாணன், சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டனர். 

Similar News