உள்ளூர் செய்திகள்
புதுச்சேரியில் வரும் பிப்ரவரி 4-ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு
பள்ளிகளில் பிப்ரவரி 9 முதல் 15-ம் தேதி வரை திருப்புதல் தேர்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரியில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா குறைந்துள்ள நிலையில், வரும் பிப்ரவரி 4-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
1 முதல் 12-ம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளும் பிப்.4-ம் தேதி முதல் திறக்கப்படுகிறது. பள்ளிக்கு வராதவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் தொடரும்.
பிப்ரவரி 9 முதல் 15-ம் தேதி வரை திருப்புதல் தேர்வுகள் நடைபெறும். வாரத்தில் ஆறு நாட்களும் பள்ளிகள் நடைபெறும். ஞாயிற்றுக்கிழமை மட்டும் மாணவர்களுக்கு விடுமுறை உண்டு.
புதுச்சேரியில் கல்லூரிகளும் பிப்ரவரி 4-ம் தேதி முதல் திறக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.