உள்ளூர் செய்திகள்
புதுவை அருகே மூதாட்டி கற்பழிப்பு - குடிபோதையில் வாலிபர் வெறிச்செயல்
புதுவை அருகே விவசாய நிலத்தில் வேலை பார்த்த மூதாட்டி கற்பழிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாகூர்:
புதுவை எல்லைப் பகுதியான பாகூரை அடுத்த சோரியாங்குப்பம், கிருமாம்பாக்கம் மற்றும் முள்ளோடை பகுதியில் சுமார் 20-க்கும் மேற்பட்ட மதுக்கடை, சாராயக்கடை இருந்து வருகிறது.
இங்கு மது குடிக்க அண்டை மாநிலமான கடலூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமான மது பிரியர்கள் வந்து மது அருந்தி செல்கின்றனர்.
சிலர் சொகுசாக இருக்க வேண்டும் என்று மது பானங்களை வாங்கிக் கொண்டு நிலத்திலும், ஆற்றின் கரையில் அமர்ந்து மது அருந்தி வருகின்றனர்.
இதனால் அவ்வப்போது சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டு வருகிறது.
இதனால் பெண்கள், சிறுவர்கள் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் எல்லைப் பகுதியில் கடுமையாக அவதிக் குள்ளாகின்றனர். பாகூர் போலீஸ் நிலையத்தில் போலீசார் குறைவாக இருப்பதால் ரோந்துப் பணியில் மந்தமாக இருந்து வருகிறது. இதனைப் பயன்படுத்தி பல குற்ற சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகிறது.
இந்த நிலையில் நேற்று 63 வயது மூதாட்டி ஒருவர் மணிலா விவசாயம் செய்ய அப்பகுதியில் உள்ள நிலத்திற்குச் சென்று உள்ளார். அங்கு களை எடுத்துக் கொண்டிருக்கும்போது 25 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் குடிபோதையில் மூதாட்டியிடம் செல்போன் கேட்டுள்ளார். அதற்கு அவர் கொடுத்துள்ளார்.
அப்பொழுது அவரைப் பற்றி விசாரித்துக் கொண்டிருந்த அந்த வாலிபர், திடீரென அங்கிருந்து ஒரு தடியால் மூதாட்டியின் கழுத்தில் தாக்கினார்.
இதில் மயங்கி கீழே விழுந்த மூதாட்டியை அந்த வாலிபர் தரதரவென இழுத்துச் சென்று அங்கு உள்ள ஒரு புதரில் வைத்து கற்பழித்தாக கூறப்படுகிறது.
மயக்க நிலையில் இருந்த அந்த மூதாட்டியிடம் வெளியில் சொன்னால் உன்னை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி விட்டு மூதாட்டி காதில் அணிந்திருந்த தங்க கம்மலை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டார்.
இந்தநிலையில் வயலுக்குச் சென்ற மூதாட்டி வெகு நேரமாக வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் நிலத்துக்கு வந்து பார்த்தனர். அப்போது மூதாட்டி அலங்கோலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை சிகிச்சைக்காக பாகூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளனர்.
இது குறித்து பாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வரதராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் போலீஸ் சூப்பிரண்டுகள் ரவிக்குமார், தீபிகா ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். மூதாட்டியை கற்பழித்து நகையை பறித்து சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் பாகூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.