உள்ளூர் செய்திகள்
பாண்டி மெரினா கடற்கரை

தமிழகத்தில் முழு ஊரடங்கு வாபஸ் எதிரொலி- புதுவையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

Published On 2022-01-31 08:12 IST   |   Update On 2022-01-31 08:12:00 IST
தமிழகத்தில் முழு ஊரடங்கு வாபஸ் பெறப்பட்டதன் எதிரொலியாக புதுச்சேரியில் நேற்று சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்தனர்.
புதுச்சேரி:

புதுச்சேரி அரசு சுற்றுலாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. எனவே வார இறுதி நாட்களில் வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.

கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் புதுவைக்கு தமிழக பகுதியை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வரத்து குறைவாக காணப்பட்டது.

இந்த நிலையில் தொற்று பாதிப்பு குறைந்ததை தொடர்ந்து தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு தளர்த்தப்பட்டது. இதன் காரணமாக நேற்று புதுச்சேரியில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்தனர்.

புதுச்சேரி கடற்கரை, பாரதி பூங்கா, நோணாங்குப்பம் படகு குழாம், மணக்குள விநாயகர் கோவில், அரவிந்தர் ஆசிரமம், பாண்டி மெரினா பீச் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கடற்கரை சாலையில் தலைமை செயலகம் எதிரே உள்ள செயற்கை மணல் பரப்பு, பழைய துறைமுக பாலம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி விளையாடி மகிழ்ந்தனர்.

புதுச்சேரி நகர பகுதியில் நேற்று ஏராளமான வெளிமாநில பதிவெண் கொண்ட கார்கள் உலா வந்தன. இதனால் நகரின் முக்கிய வீதிகளான அண்ணாசாலை, நேருவீதி, புஸ்சி வீதி, கடலூர் சாலை, மரப்பாலம் சந்திப்பு உள்ளிட்ட அடிக்கடி வாகன நெரிசல் ஏற்பட்டது.

சுற்றுலா பயணிகள் வருகையால் ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் அறைகள் முழுவதும் நிரம்பின. கடைவீதிகளில் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக பார்க்க முடிந்தது. ஓட்டல்கள், துணி கடைகளில் வியாபாரம் நன்றாக இருந்தது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

சண்டே மார்க்கெட்டில் உள்ளூர் மக்கள், சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அவர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை பேரம் பேசி வாங்கி சென்றனர். சமூக இடைவெளி கடைபிடிக்கப்படாததால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.

Similar News