உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

ஆசிரியையிடம் நகை பறித்த 2 பேர் சிக்கினர்

Published On 2022-01-30 13:36 IST   |   Update On 2022-01-30 13:36:00 IST
திருபுவனை அருகே ஆசிரியையிடம் நகையை பறித்து சென்ற 2 பேர் சிக்கினார்கள்.

புதுச்சேரி:

திருபுவனை அருகே திருபுவனை பாளையம் ஜெயநகரை   சேர்ந்தவர் அமுதா (வயது 58). இவர் மதகடிப்பட்டில்   உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

சம்பவத்தன்று பள்ளி முடிந்து அமுதா தன்னுடன் பணிபுரியும் ஆசிரியை லாவண்யா என்பவருடன் வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். 

திருபுவனை கடை தெருவில் வந்த போது, பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில்   ஹெல்மெட் அணிந்து வந்த 2 பேர் திடீரென லாவண்யாவின் கழுத்தில் அணிந்திருந்த தங்க 
செயினை பறிக்க முயன்றனர்.

உடனே சுதாரித்துக் கொண்ட   லாவண்யா தங்க சங்கிலியை கையால் கெட்டியாக பிடித்துக் கொண்டார். 

இதையடுத்து மர்ம நபர்கள் அமுதா கழுத்தில் அணிந்து இருந்த 2 பவுன் தங்க 
செயினை பறித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர். 

கொள்ளையர்கள் செயினை பறிக்கும் போது அமுதா கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். 

பொது மக்கள் நடமாட்டம் மிகுந்த அப்பகுதியில் துணிகரமாக செயினை பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில்  பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து, அமுதா திருபுவனை போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன், சப்&இன்ஸ்பெக்டர்கள் குமாரவேலு,  அஜய்குமார் மற்றும்  குற்றப்பிரிவு போலீசார்  வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மேலும் சம்பவம் நடந்த இடத்தில் பொருத் தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து கொள்ளையர்களை பிடிக்க நடவடிக்கை எடுத்து வந்தனர். 

இந்த நிலையில் ஆசிரியையிடம் நகை பறித்த 2 பேர் சேலம் பகுதியில் பதுங்கி இருப்பதாக திருபுவனை போலீசாருக்கு  தகவல் கிடைத்தது.

இதையடுத்து திருபுவனை போலீசார் சேலம் போலீசார் உதவியுடன் சேலம்& கோவை சாலையில்   பூந்தோட்டம் பகுதியில் பதுங்கி இருந்த கொள்ளையர்கள் 2 பேரையும் மடக்கி பிடித்து திருபுவனை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு  வந்தனர்.

அங்கு அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் மதுரை விக்கிர மங்கலத்தை சேர்ந்த கருப்பசாமி (22), மற்றும் அவனது   கூட்டாளி சென்னை ராஜாஜி நகரை சேர்ந்த சசிகுமார் (20) என்பது தெரிய வந்தது.

இவர்கள் ஆசிரியை அமுதாவிடம் நகை பறித்து சென்றதை ஒப்பு கொண்டனர்.   மேலும் இவர்கள் மீது தமிழகம் மற்றும் புதுவையில் திருட்டு, வழிப்பறி மற்றும் கொள்ளை வழக்குகள் ஏற்கனவே உள்ளது தெரிய வந்தது.

இதை தொடர்ந்து கருப்பசாமி மற்றும் சசிகுமாரை கைது செய்து அவர்களிடம் இருந்து தங்க செயினை பறிமுதல் செய்தனர்.

பின்னர் அவர்களை கோர்ட்டில்  ஆஜர்படுத்தி காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர்.

Similar News