உள்ளூர் செய்திகள்
மின்துறை தனியார் மயமாகாது என ரங்கசாமி அறிவிக்க வேண்டும்- தி.மு.க. வலியுறுத்தல்
மவுனமாக இருந்தால் சாதிக்க முடியாது மின்துறை தனியார் மயமாகாது என ரங்கசாமி அறிவிக்க வேண்டும் தி.மு.க. வலியுறுத்தியுள்ளது.
புதுச்சேரி :
புதுவை சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு புதுவை மின்துறையை தனியார் மயமாக்க முயற்சித்து வருகிறது. தனியார் மயமானால் சேவை நோக்கு என்பது லாப நோக்காக மாறிவிடும்.
மின்சாரம் என்பது பொதுப்பட்டியலில் வரு கிறது. மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் மத்திய அரசு மின்துறையை தனியார் மயமாக்க எந்த நடவடிக்கையும் எடுத்துவிட முடியாது.
அதனால் தற்போதைய மத்திய அரசின் மின்துறை தனியார் மயமாக்கும் முயற்சிக்கு மாநில அரசு மவுனமாக இருப்பதால் சம்மதம் தெரிவித்து விட்டதோ? என்ற சந்தேகம் ஏற்படுகிறது.
மின் கட்டண உயர்வுக்கான பரிந்துரையும் சந்தேகத்தை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளது.
அதுபோல் தொழிலாளர் நலத்துறை சமரச அதிகாரி மின்துறை ஊழியர்கள் போராட்டத்தில் சமூக தீர்வை கொண்டுவர 31-ந் தேதி சமரச நடவடிக்கை எடுப்பேன் என்று எச்சரித்துள்ளார்.
எனவே மின்துறை தனியார் மயமாக்கும் விஷயத்தில் அரசின் கொள்கை முடிவு என்ன? என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
மின்துறை தனியார் மயமாக்கம் என்பது புதுவையின் சுய கவுரவம், தன்மானத்துடன் சம்பந்தப்பட்டது என்பதை ஆளும் அரசு உணர வேண்டும். புதுவை அரசு மின்துறை தனியார் மயமாக்குவதற்கான அனைத்து நடவடிக்கை களையும் அமைதியாகவே எடுத்து சாதித்துவிடலாம் என்று நினைத்து விடக் கூடாது.
அரசின் அனைத்து நடவடிக்கைகளையும் மக்கள் உன்னிப்பாக கவனித்து கொண்டுதான் உள்ளனர். எனவே மின்துறை தனியார் மயமாக்கப் படாது என்று வெளிப்படையாக முதல்- அமைச்சர் ரங்கசாமி அறிவிக்க வேண்டும்.
அவ்வாறு இல்லாமல் மவுனமாகவே இருந்து சாதித்துவிடலாம் என்று நினைத்து செயல்பட்டால் நிச்சயம் முடிவை அறிவிக்கும் போது மக்கள் மத்தியில் பூகம்பம் வெடிக்கும்.
இவ்வாறு சிவா அறிக்கையில் கூறியுள்ளார்.