உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

பட்டியலின-பழங்குடி மாணவர்களுக்கு 50 சதவீத கட்டணமே அரசு வழங்குகிறது காங்கிரஸ் குற்றச்சாட்டு

Published On 2022-01-29 13:42 IST   |   Update On 2022-01-29 13:42:00 IST
பட்டியலின-பழங்குடி மாணவர்களுக்கு 50 சதவீத கட்டணமே அரசு வழங்குகிறது என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
புதுச்சேரி :

புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காங்கிரஸ் ஆட்சியில் புதுவை யூனியன் பிரதேசத்தில், பட்டியலின மக்களுக்கும் பழங்குடியின மக்களுக்கும், கல்வி கட்டணங்களை முழுமையாக, ஆரம்ப கல்வியில் இருந்து ஆராய்ச்சிக் கல்வி வரை ஏற்றுக் கொள்ள அரசு ஆணை பிறப்பித்தது. 

இந்த திட்டத்தினை செப்டம்பர் 2021-ல் தொடங்கிய போது ரூ. 1 கோடிக்கான ஆணையை கல்வி நிறுவன அதிகாரிகளிடம் வழங்கினர்.

இதில் இப்போது 50 சதவீத கட்டணம் மட்டுமே கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பப்படுகிறது. 

எனவே, அந்த கல்வி நிறுவனங்கள் மீதி 50 சதவீத கட்டணங்களை மாணவர்களிடம் வசூலிக்கிறது. மேலும் 10 ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்ட பழைய கட்டணங்களையே அந்த பள்ளி நிர்வாகங்களுக்கு அனுப்பப்படுகிறது. 

ஆனால், இப்போது பள்ளி நிறுவனங்கள், தங்கள் கட்டணங்களை உயர்த்தி இருக்கின்றனர். 

கல்வி கட்டணம் செலுத்தாத மாணவ-மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்புகளை நிறுத்தி விடுவோம் என்று மிரட்டுகிறார்கள். தேர்வு எழுத அனுமதிக்காமல் இருக்கிறார்கள்.

தற்போதுள்ள என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜனதா அரசு தான்  பிரச்சினைகளை சரிசெய்ய முடியும். 

எனவே பட்டியல் இன மக்கள் மற்றும் பழங்குடி மக்கள் கல்வி திட்டத்தின் பலன்களை சரிவர கிடைக்கச் செய்ய வேண்டும். இதற்கான முயற்சிகளை இந்த அரசு மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு ஏ.வி. சுப்ரமணியன் அறிக்கையில் கூறியுள்ளார்.

Similar News